Saturday, May 12, 2012

‘அமரர் கல்கியும் சிவகாமியின் சபதமும்’ : வைகோவின் அருமையான இலக்கியச் சொற்பொழிவு



‘அமரர் கல்கியும் சிவகாமியின் சபதமும்’  பற்றிய அருமையான இந்த இலக்கியச் சொற்பொழிவுக்கு வைகோ அவர்களுக்கு முதற்கண் நன்றிகள்..
இதில் வரலாற்றுப் புதினங்களின் வரலாறு, அமரர் கல்கி மற்றும் அவரின் அளப்பரிய புகழ்மிக்கப் படைப்புகளின் வரலாறு மற்றும் சிவகாமியின் சபதம் பற்றிய ஓர் அலசல் ஆகியவற்றை அருமையாகச் சொல்லியிருக்கின்றார்..!

தளம்: http://mdmk.org.in/article/mar09/sivagamiyin-sabatham

இலக்கியச் சொற்பொழிவு பின்வருமாறு...

அனைவருக்கும் வணக்கம். விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்டகுறை வந்து தொட்டாச்சு என்ற சொற்களால் தூண்டப்பட்டு இந்த சிவகாமியின் சபதத்தை எழுதினேன்என்று கூறிய கல்கி ஆசிரியர் அவர்களுக்குப் புகழ் விழா நடத்துகிறோம்; உரையாற்ற வாருங்கள்என்று கலைமாமணி விக்ரமன் அவர்கள் அழைத்தவுடன், கிடைத்தற்கு அரிய வாய்ப்பாகக் கருதி இசைவு அளித்தேன். இத்தகைய விழாவில் என்னை உரையாற்றுகின்ற தகுதிக்கு உடையவனாக, உங்கள் முன்னால் நிறுத்தி இருக்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு, அதன் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது தலையாய கடமை ஆகும்.

நான் பெற்ற பெரும்பேறு

இலக்கிய உலகில் கல்கி அவர்களின் பெருமைகளை எடுத்துசொல்ல, தஞ்சையில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. புகழ்மிக்க பூண்டி வாண்டையார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தஞ்சை விழாவில்பொன்னியின் செல்வன் பற்றி உரையாற்றுகின்ற பெரும்பேறு பெற்றேன். இன்று தலைநகர் சென்னையில்சிவகாமியின் சபதம் குறித்து உரையாற்றுக எனப் பணித்து இருக்கிறீர்கள்.

சின்னஞ்சிறு வயதில் பள்ளி மாணவனாக இருந்தபோது என் இல்லத்திற்கு வழக்கமாக வந்து கொண்டு இருந்த கல்கி வார ஏடுகள் முழுமையாகப் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், அவ்வப்போது தொடர்கதையாக வந்த ஒரு சில அத்தியாயங்களை, ஆர்வத்தின் காரணமாக பொன்னியின் செல்வனை - பார்த்திபன் கனவை - சிவகாமியின் சபதத்தைப் படித்ததால் ஏற்பட்ட உணர்ச்சிதான், பள்ளி மாணவனாக இருந்தபோது பழந்தமிழ் மன்னர்களைப் பற்றிய உணர்வு, தமிழர்களின் கலையைப் பற்றிய, கடல் கடந்து பல நாடுகளுக்குப் படையெடுத்துச்சென்று பெற்ற வெற்றிகள், போற்றப்பட்ட கலைகள், இசையும், சிற்பியும், சித்திரமும் அவர்கள் பாராட்டி வந்த பாண்பாடும் இவை எல்லாம் இதயத்தை முழுமையாக ஈர்த்த காரணத்தால் வந்த உணர்வுதான் தமிழ் மேல் ஏற்பட்ட எல்லையற்ற காதல். அது ஊனில் உதிரத்தில் ஊடுருவி விட்ட காரணத்தால், தமிழருக்குப் பெரும் சிறப்புச் செய்த பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்திலே நான் போய் இணைந்தேன்.

கல்கியின் படைப்புகள்

வரலாற்று நாவல்களைப் பற்றி இங்கே உரையாற்ற வேண்டும். கல்கி ஆசிரியரின் படைப்புகள், எழுத்து உலகில் அவர் சாதித்த சாதனைகள் பல. 1930 களில் அவர் ஆனந்த விகடன் வார ஏட்டில் அவர் இணைந்த காலம். முதல் முதலாக ஏட்டிக்கு போட்டி என்று எழுதியதைகல்கி என்ற பெயரில் எழுதினார். அவர் பல பெயர்களில் எழுதி இருக்கிறார். அதை அவரே சொல்கிறார். குகன் - அகத்தியன் - கர்நாடகம் - லாங்கூலன் - எமன் - விவசாயி - பெற்றோன் - ஒரு பிராமண இளைஞன், தமிழ்மகன் - இரா.கி. என்றும் எழுதிக் குவித்தார்.

இத்தனையும் தீட்டி இருக்கின்ற கல்கி அவர்களின் முதல் சிறுகதைவிஷ மந்திரம் கடைசியாக அவர் எழுதிய 119 ஆவது சிறுகதைதிருடன் மகன் திருடன் அவருடைய நாவல்களை வரிசையாக படம் பிடித்துக் காட்டுவதற்கு நேரம் இல்லை.

வரலாற்று நாவல்களின் வரலாறு

அவருடைய படைப்புகளில் சரித்திர நாவல்களைப்பற்றி குறிப்பிடுகிறபோது, தமிழகத்தில் சரித்திர நாவல்களை முதலில் எழுதியவர்கள் யார்?

'மனுமுறை கண்ட வாசகம்

மோகனாங்கியைத் தந்த சரவணமுத்துப்பிள்ளைதான் முதன்முதலாக சரித்திர நாவலை எழுதினார். அதற்கும் முன்னரே ஒருவர் எழுதினார்.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வடலூர் வள்ளலார் எழுதினார். மனுமுறை கண்ட வாசகம் இது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளலார் தீட்டிய வரலாற்று நூல். மனுமுறை கண்ட வாசகம், தமிழர்களின் வரலாற்றில், சோழ மாமன்னர்களின் சரித்திரத்தில், இராஜபாரத்தைப்பற்றி சிவகாமியின் சபதத்தில் மகேந்திரவர்மன் வாயிலாகக் கல்கி சொல்வது.

அரசன் எப்படி இருக்க வேண்டும்? அவன் எந்த உணர்வுகளைக் கடந்து இருக்க வேண்டும்? மணிமுடி தாங்குகின்ற மன்னர்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததுதான்;

மன்பதை காக்கும் தென்புலம் காவல்
துன்பம் அல்லது தொழுதகவில்

என்று வாழ்ந்த தமிழகத்தில், மன்னர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு, ‘இப்படித்தான் இருந்தான் சோழ நாட்டில் திருவாரூரில் மனுநீதிச் சோழன்என்று அவன் வரலாற்றை, ‘மனுமுறை கண்ட வாசகம்என்று எழுதினார் வடலூர் வள்ளலார்.

1895 ஆம் ஆண்டு சரவணமுத்துப்பிள்ளை அவர்கள்மோகனாங்கிஎன்ற வரலாற்று நாவலைத் தீட்டினார். அதனை அடுத்து கூடலிங்கப்பிள்ளை அவர்கள், 1903 இல் மங்கம்மாள் என்ற சரித்திர நாவலைத் தீட்டினார். அதனைத் தொடர்ந்து குழந்தைசாமிப் பிள்ளை அவர்கள்சத்தியவல்லி என்ற சரித்திர நாவலை எழுதினார். ஆக, வரலாற்று நாவல்கள் என்று சொல்கிறபோது, நடந்த சம்பவங்களை, கல்வெட்டுகளில் ஏடுகளில் கண்டு, அவற்றை எதிர்காலத் தலைமுறையினர் பயன் பெறுகிற விதத்தில் தருகின்ற பணியைத்தான் சரித்திர நாவல் ஆசிரியர்கள் செய்து இருக்கிறார்கள். இந்த விழாவுக்குத் தலைமை தாங்குகிற கலைமாமணி விக்கிரமன் அவர்கள் தகுதி வாய்ந்தவர். அவர் அமுதசுரபியில் நந்திபுரத்து நாயகியைத் தீட்டினார்.

கல்கி நாவல்களின் தொடர்ச்சி

அமரர் கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது, பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னாரே, அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்திநந்திபுரத்து நாயகி என்கின்ற அற்புதமான நவீனத்தையும்குலோத்துங்கன் சபதம் என்ற நாவலையும் எழுதிய விக்கிரமன் அவர்கள், இந்த விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

சேது பந்தனம்’ ‘ஈழவேந்தன் சங்கிலி போன்ற சரித்திர நாவல்கள் எழுதிய கவுதம நீலாம்பரனுக்கு இங்கே விருது வழங்கப்பட்டது. சரித்திர நாவல்களைப் பலரும் எழுதி இருக்கிறார்கள். கயல்விழியும், ‘வேங்கையின் மைந்தனும் அகிலன் தந்தார். அற்புதமான நாவல்களைப் படைத்து இருக்கக்கூடிய மணிவண்ணன் என்ற பெயரில் குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு நாவல்களை எழுதிய நா. பார்த்தசாரதி அவர்கள்,பாண்டிமாதேவி’ , மணிபல்லவம் என்ற பெயர்களில் அருமையான சரித்திர நாவல்களை எழுதினார்கள்.
அப்படி அதே உணர்வோடுதான் கன்னிமாடம் தொடங்கிராஜமுத்திரை வரையில்யவனராணி’, ‘மன்னன் மகள் என எத்தனையோ நூல்களை எழுதிக் குவித்தார் சாண்டில்யன். இப்படிப் புகழ்மிக்க எழுத்தாளர்கள் பலரும், சரித்திர நாவல்களை எழுதி இருக்கிறார்கள்.

இங்கே சிவகாமியின் சபதத்தைப் பற்றிப் பேசுகிற காரணத்தால், தமிழிலே சரித்திர நாவல்களை தந்தவர்களைச் சொல்ல வேண்டியது என் கடமை. எண்ணற்ற சிறந்த எழுத்தாளர்கள் சரித்திர நாவல்களை எழுதி இருக்கிறார்கள் என்கிறபோதுபொன்னர் சங்கர் - ரோமாபுரிப் பாண்டியன் - பாயும்புலி பண்டாரக வன்னியன் - தென்பாண்டிச் சிங்கம் ஆகிய வரலாற்று இலக்கியங்களை டாக்டர் கலைஞர் அவர்கள் தந்தார்கள். வீரபாண்டியன் மனைவி என்று நெடுநாள்களுக்குத் தன்னுடைய காதல்பத்திரிக்கையில் அரு. இராமநாதன் எழுதி வந்தார்.திருச்சிற்றம்பலம் என்கிற அற்புதமான சரித்திர நாவலை ஜெகசிற்பியன் தந்தார். குடவாயில் கோட்டம் என்கின்ற நாவலை கோவி. மணிசேகரன் தந்தார்.

சரித்திர நாவல்களின் சிறப்பு

சரித்திர நாவல் என்பது, எண்ண அற்புதத்தையும் இயல்பையும் ஒன்றாக இணைக்கின்ற அரிய கலை என்று சொன்னான் வால்டர் ஸ்காட். அவன் சரித்திர நாவல்களை அழகாகத் தந்தவன், 18ஆம் நூற்றாண்டில் ஆங்கில நாட்டில், அவன் எழுதிய ஐகோவா என்கின்ற அற்புதமான சரித்திர நாவல் ,அதைப்போலத்தான் அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய மூன்று வீரர்கள்’ (Three Musketeers) இப்படிப்பட்ட நூல்களை எல்லாம் நான் குறிப்பிடுகிற வேளையில், நம்முடைய இராஜகோபாலன் அவர்கள் பிரெஞ்சுப் புரட்சியைப்பற்றி இங்கே சொன்னார்கள். பிரெஞ்சுப் புரட்சிஅதிலே ரோபர்ஸ்பியரை வெட்டுப் பாறைகளில் கொண்டுபோய்த் தலைகளைத் துண்டிக்கிற இடத்திலே, அவன் தலையும் துண்டிக்கப்பட்டதே அந்த ரோபர்ஸ்பியரையும் கதாபாத்திரமாக்கி கார்லைல் எழுதினான்.

கார்லைல் எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்! வலிமை அற்றவனின் பாதையில் தடையாக இருக்கின்ற கருங்கல் பாறை, வலிமை மிக்கவனின் பாதையில் இருந்தால், அதுவே படிக்கட்டாக மாறும்என்று சொன்னார். அதைச் சுட்டிக்காட்டியவர் அறிஞர் அண்ணா. எல்லை கடந்த பெருமையைப் பெற்றவர் கல்கி ஆசிரியர். மாணவப் பருவத்தில் இருந்து நான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன்.

கல்கியின் சிறைவாசம்

கல்கியின் புகழ் விழாவில் கல்கியைப் பாராட்டுகிறானே என்றால், நாட்டின் விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கல்கி அவர்கள், சோழ மண்டலத்தில் புத்தமங்கலத்தில் பிறந்த கல்கி அவர்கள், நாட்டு விடுதலைக்காக மூன்று முறை சிறை சென்று இருக்கிறார். அந்த சிறையின் அனுபவங்களைப் பற்றி. சிறைச்சாலைக்குக் கொண்டு செல்கிற போது முசிறி கிளைச்சிறையில் 34 நாள் கொண்டுபோய் வைத்து இருந்து, அதற்குப் பிறகு திருச்சி நடுவண் சிறைச்சாலைக்குக் கொண்டு போகின்ற வேளையில், அவருடைய கால்களில் விலங்கு பூட்டப்பட்டு, அதில் சங்கிலி போடப்பட்டு இருக்கிறது. 14 நாட்கள் அந்தக் காப்பும் சங்கிலியும் அவர் கால்களைப் பிணைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த முறையில்தான் அவர் சிறைக்கோட்டத்திற்குப் போனார்.

நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர், அதேகாலத்தில் விடுதலைக்குப் போராடடிய ஒரு இயக்கத்தில் பற்றுகொண்டு, அந்த இயக்கத்தின் மதிப்புமிக்க தலைவராக இருந்த ராஜாஜியின் நேசத்திற்கு உரிய நண்பராக இருந்தார். 1947 இல், திராவிட இயக்கம் அனலாக எழுந்து கொண்டு இருந்த காலம். தந்தை பெரியார் அவர்கள் பக்கத்தில், அறிஞர் அண்ணா இருந்த காலம். திராவிடர் கழகத்தில் அறிஞர் அண்ணா இருந்தபோது, கல்கி அவர்களின் அணுகுமுறைக்கு நேர் எதிர்நிலையில் அண்ணா அவர்கள் இருந்தபோதுதான், 1947 டிசம்பர் திங்களில்கல்கி இதழில் ஆசிரியர் எழுதுகிறார்.

இங்கே ஓர் பெர்னார்ட் ஷா

1947 நவம்பர் 15 அன்று, திருச்சியில் ரத்தினவேல் தேவர் மண்டபத்தில் நடிப்பு இசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்கள் நடித்த, அண்ணாவின்ஓர் இரவு நாடகத்தைப் பார்க்கிறார். அந்த நாடகத்திற்குக் கல்கி தலைமை தாங்குகிறார். கல்கியின் பின்னணி, அவருடைய அரசியல் ஈடுபாடு, நாட்டு விடுதலைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நிலை. இச்சூழ்நிலையில் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். என்ன அழகாக வருணிக்கிறார்!

தற்காலத்து நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள், பெர்னாட் ஷாவையும், கிப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம், கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு பெர்னாட் ஷாவுக்கும், ஒரு கிப்சனுக்கும் எங்கே போவது? திருடப் போக வேண்டியதுதான்என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும், கிருடவும் போக வேண்டாம், தமிழ்நாடு நாடக ஆசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன். இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சினாப்பள்ளியில் ஓர் இரவுஎன்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது .பார்த்ததன் பயனாக ,"இதோ ஒரு பெர்னாட்ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார் !கிப்சனும் இருக்கிறார் !இன்னும் கால்ஷ்வொர்தியும் கூட இருக்கிறார் " என்று தோன்றியது .நடிக்கக்கூடிய நாடகத்தை எழுதும் ஆற்றல் மிகவும் அரியது .அந்த ஆற்றல் திரு .அண்ணாதுரையிடம் பூரணமாக அமைந்திருக்கிறது என்பதை 'ஓர் இரவு நாடகத்தில் கண்டு மகிழ்ந்தேன்”.
இது கல்கியில், கல்கி ஆசிரியர் அவர்கள் எழுதியது!

ஒரு எழுத்தாளர், இன்னொரு எழுத்தாளனைப் பாராட்டி எழுதுகிறார். அரசியல் எல்லைகளைக் கடந்து எழுதுகிறார். ஆகவேதான், இலக்கிய உலகில் அரசியல் எல்லைகள் உடைந்து நொறுங்கிவிடும். கல்கி ஆசிரியர் அண்ணாவைப்பற்றி இப்படி எழுதினார்கள் என்றால், ‘சரித்திரத்தின் பெருமைகளை அடுப்பங்கரைப் பெண்களும் எட்டிப் பார்க்கின்ற நிலையை உருவாக்கியவர்என்று கல்கியைப் பற்றி அண்ணா எழுதினார்.

ஏன் எழுதினேன்?

அந்தக் கல்கி அவர்கள் சிவகாமியின் சபதத்தை ஏன் படைத்தேன் என்று சொல்கிறார். அலைகள் துள்ளி விளையாடுகின்றன. மாமல்லபுரம் கடற்கரை மணலில் அமர்ந்து இருக்கிறார். அருகில், ரசிகமணி டி.கே.சி. அமர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் கல்கி அவர்கள், ‘விட்டகுறை வந்து தொட்டாச்சுஎன்று கோபாலகிருஸ்ண பாரதியார் எழுதி இருக்கிற கவிதையை அழுத்தமாகச் சொன்னார். கல்கியின் மனத்திரையில் பல காட்சிகள் வெளிவருகிறன்றன. பல நிகழ்ச்சிகள் தெரிகின்றன. அவர் காதுகளில் சிற்பிகளின் ஓசை கேட்கிறது. கல்லிலே உளிபடுகிற காரணத்தால், அந்த உளி செதுக்குகின்ற சத்தம் கேட்கிறது. நடனக்கலை கண்ணுக்கு தெரிகிறது. ஆயிரம் ஆயிரம் படகுகளில் வீரர்கள் பவனி வரும் காட்சி தெரிகிறதுஎன்று பழம் பெருமைக்கு உரிய தமிழ் மன்னர்கள் வாழ்ந்த நிகழ்ச்சிகள், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட அந்தச் சிற்பங்கள், அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, இவை எல்லாம் என் மனக்கண்ணில் தெரிகின்றன என்று வரிசையாக பாத்திரங்களைச் சொல்கிறார்.

ஆம், ஆயனர், சிவகாமியைச் சொல்கிறார். மகேந்திரவர்மர், மாமல்லர், கண்ணன் - கமலி, பொன்னன் - வள்ளி, நாகநந்தி - புலிகேசி, பரஞ்சோதி என இவர்களைப் பற்றியெல்லாம் குறிப்பாகச் சொல்லி, இத்தனைபேரும் என் முன்னால் வந்து போகிறார்கள். இந்தப் புத்தகம் என் கனவாக இருக்கும் சிவகாமியின் சபதம்’. என்கிறார்.

பார்த்திபன் கனவு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் அல்லவா, அபாரமான புத்தகம் என்று நேயர்கள் ஒரு முடிவிற்கு வந்து இருப்பீர்கள். ஆனால் இந்தப் புத்தகத்தை இந்த பாரத்தை 12 ஆண்டுகள் நான் சுமந்து கொண்டு இருந்தேன் என்று எழுதுகிறாரே, அப்படியானால் 1932 ஆம் ஆண்டில் இருந்து இந்த எண்ணத்தை அவர் கொண்டு இருக்க வேண்டும். 1944 ஜனவரி 1ஆம் தேதி அவர் சிவகாமியின் சபதத்தைஎழுதத் தொடங்குகிறார். அதற்கு முன்னரே, 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில்கல்கி ஏடு தொடங்கப்படுகிறது. ஆனந்த விகடனில் பணியாற்றிவிட்டு, அதற்குப்பிறகு கல்கியைத் தொடங்குகிறார். அதே ஆண்டிலேயே அவர்பார்த்திபன் கனவு எழுதத் தொடங்குகிறார். 1941 அக்டோபர் 16ஆம் நாள் பார்த்திபன் கனவு தொடர்கதையை எழுதத் தொடங்கி, 1943 பிப்ரவரி 10ஆம் தேதி அதை நிறைவு செய்கிறார். இதில் ஆண்டுகளை நீங்கள் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இறைஞ்சுகிறேன்...

ஏதோ சம்பிராயத்திற்கு அழைத்தார்கள், என்னைப் பெருமைப்படுத்தினார்கள், எதையாவது பேசிவிட்டுப் போகவேண்டும் என்ற உணர்வில் நான் இல்லை. என் மனக்கண்ணில் கல்கி இருக்கிறார். நான் பேசுவதற்கு ஒலிபெருக்கிக்கு முன்னால் வருவதற்கு முன்பு, இதயத்தில் கல்கியைத்தான் நினைத்தேன். ஐயா, உங்களைப் பற்றிப் பேசப் போகிறேன். வருங்காலத் தமிழர் சமுதாயம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இது ஒளிப்படமாகவும் பதிவு செய்யப்படுகிறதே, நான் பிழை இன்றிப் பேச, நல்ல முறையில் எடுத்துச் சொல்லும் ஆற்றலை, கல்கி அவர்களே எனக்குத் தாருங்கள்என்று இதயத்தில் இறைஞ்சியவாறுதான் இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்.

மானசீகமாக அந்த உணர்வோடுதான் வந்து நிற்கிறேன். வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் நம்மைக் கடந்து செல்கிற நாட்கள் திரும்ப நமக்கு வராது. எதைச் செய்வதாக இருந்தாலும் அதை இன்றே செய்து விடு. இந்தப் பயணம் இன்னொரு முறை நமக்கு வராது. ஒரேஒரு முறைதான் இந்த வாழ்க்கைப் பயணம். அது திரும்ப வராது. இந்தப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் பயனுள்ள நாட்கள். இதில் வாய்ப்பு என்பது, புனிதமான கடமை உணர்வோடு சொல்கிற காரணத்தால், தமிழர் சமுதாயத்திற்குத் தெரிய வேண்டும் கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும்.

நம்பிக்கையை விதை

போர் மூண்டுவிட்டது, யுத்தம் வந்துவிட்டது 15,000 போர் யானைகளோடு 5 இலட்சம் படைவீரர்களோடு புறப்பட்டு வந்து விட்டான் சாளுக்கிய புலிகேசி. நெருங்கி விட்டான். வடபெண்ணை ஆற்றின் கரையில் இருக்கிறான் என்று நினைக்கிறபோது, தக்க ஆயத்தம் செய்யவிலையே என்று கவலைப்படுகிற விசித்திரசித்தர், சித்தரக்காரப் புலி ஆம், மத்தவிலாசன் என்று சொல்லப்படுகிற மகேந்திரவர்மன், மனம் உடைந்த நிலையிலும் அவர் சொல்கிறார். அவருக்கு அன்றைக்கு இருந்த நம்பிக்கையைக் கல்கி வைக்கிறார். ஊருக்கு ஊர் மகாபாரதத்தைப் படிக்கச் சொல்லுங்கள். மக்கள் நெஞ்சிலே வீரம் பிறக்கட்டும். அதன் மூலமாகப் போர்க்களத்தைச் சந்திக்கூடிய நிலைமைக்குப் பல்லவ நாடு ஆயத்தம் ஆகட்டும்என்று சொல்கிறார் இதே சிவகாமியின் சபதத்தில்.

பதிய வேண்டும்

என் கருத்து, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற நூல்கள் தமிழ் இளைஞர்கள் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டும் என்பது, கல்கி அவர்கள் அந்தக் காலகட்டத்திற்கு தேவையாக மகேந்திரவர்ம பல்லவன் இப்படிச் சொன்னதாகச் சொன்னால், தமிழ் உள்ளங்களில் நமக்கு என்று ஒரு வரலாறு வீரவரலாறு, புகழ்மிக்க வரலாறு, ஒரு பழம்பெரும் பண்பாடு உண்டு இவற்றைப் பாதுகாப்பதற்கு, தமிழர் இதயங்களில், அரசியல் எல்லைகளைக் கடந்து, இந்தச் தமிழ்ச் சமுதாயத்தின் வருங்காலத் தலைமுறை தேர்ந்து படிக்க வேண்டிய நூல்களில், ‘பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவுஇடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் சொல்கிறேன்.

1941 இல் அக்டோபரில் தொடங்கி, 1943 பிப்ரவரியில் பார்த்திபன் கனவு முடிகிறது. 1944 ஜனவரி 1ஆம் நாள், சிவகாமியின் சபதத்தைத் தொடங்குகிறார். சரியாக இரண்டரை ஆண்டு காலம், 1946 ஜூன் 30இல் சிவகாமியின் சபதத்தை முடிக்கிறார். முற்றும்என்று கொட்டை எழுத்தில் போட்டேன் என் பாரம் நீங்கியதுஎன்று சொல்கிறார்.

அதற்குப் பிறகு, 1948 ஆம் ஆண்டு அலை ஓசை வருகிறது. மீண்டும், 1951 இல் அக்டோபர் 29ஆம் தேதி, ‘பொன்னியின் செல்வன்தொடங்குகிறார். 1954 ஆம் ஆண்டு, மே 16 ஆம் தேதி பொன்னியின் செல்வனை நிறைவு செய்கிறார். ஏன் ஆண்டுகளைச் சொல்கிறேன் என்றால், எந்த எழுத்தாளருக்கும் இல்லாத சிறப்பு கல்கிக்கு உண்டு. நியாயமாகப் பார்த்தால் சிவகாமியின் சபதம் எழுதியதற்குப்பிறகுதான் பார்த்திபன் கனவு எழுதி இருக்க வேண்டும்.

அடடா விட்டுப்போய்விட்டதே, நாம் தெரியாமல் முதலில் பார்த்திபன் கனவை எழுதி விட்டோம் என்று நினைக்க வேண்டிய தேவை கல்கிக்கு வரவில்லை. ஏன் தெரியுமா? சிவகாமியின் சபதத்தைத் பின்னர் எழுதினாலும், அந்த சிவகாமியின் சபதம் மொத்தக் காவியத்தின் நெடுகிலும் வருகின்ற, எந்த ஒரு இலக்கியத்திலும், எந்த நாடக காப்பியத்திலும் அது எந்த மொழியிலும் காண முடியாத ஒரு கதாபாத்திரமாகிய நாகநந்தி’ ‘பார்த்திபன் கனவிலும் வருகிறார். இதுதான் பிரச்சனை. ஆக முரண்பாடு இல்லாமல் காப்பியம் வருகிறது. இந்த நாகநந்திதான், பார்த்திபன் கனவில்நீலகேசி என்ற பெயரில் வருகிறான்.

பரஞ்சோதி

நான் இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. பார்த்திபன் கனவும் - சிவகாமியின் சபதமும் - பொன்னியின் செல்வனும் எழுதிக் குவித்த கல்கி ஆசிரியர் அவர்கள், சிவகாமியின் சபதத்தில் நான்கு பாகங்கள் வைக்கிறார் . முதல் பாகம்பரஞ்சோதி யாத்திரை; இரண்டாவது பாகம்காஞ்சி முற்றுகை; மூன்றாம் பாகம்பிட்சுவின் காதல்; கடைசி நான்காவது பாகம்சிதைந்த கனவு.

இந்த நான்கு பாகங்களை முன்வைக்கின்ற இந்தக் காப்பியத்தில், தொடக்கக் காட்சி ,எடுத்த எடுப்பில் காஞ்சிபுரத்தை நோக்கி வருகின்ற ராஜபாட்டையில் பரஞ்சோதி வருகிறான். கீழச் சோழ நாட்டில், திருச்செங்காட்டாங்குடியில் மாமாத்தியார் என்கின்ற வீரம்மிக்க குலத்தில் பிறந்து, தமிழ் படிக்கவும், சிற்பக் கலை பயிலவும் பரஞ்சோதி வருகிறான். 18 வயதுத் துடிப்புள்ள வாலிபன். அவன் முரட்டுப்பிள்ளை. காஞ்சிபுரத்திற்குச் சென்று, அப்பர் அடிகள் - நாவுக்கரசர் மடத்திற்குச் சென்று, அவரிடத்திலே தமிழ் படிக்க வேண்டும் என்று பரஞ்சோதியை அனுப்பி வைக்கிறார்கள்.

பரஞ்சோதியின் மாமனார், திருவெண்காட்டு வைத்தியர், நாவுக்கரசருக்கு நெருக்கமானவர். அதே முதலாம் அத்தியாயத்தில், பரஞ்சோதி வருகிறபோதே நாகநந்தியும் வருகிறார். நாகநந்தியின் உடலில் வியர்வைத் துளிகள் தெறிக்குமானால், காற்றில் வியர்வையின் நாற்றம் கலக்குமானால், நாகப்பாம்புகள் பதறி ஓடும். காரணம், விஷ மூலிகைகளை உண்டு உண்டு, விஷத்தை முறிக்கக்கூடிய வலிமையைத் தன் மேனி முழுவதும் தேக்கி வைத்து இருக்கிறார் நாகநந்தி. அந்த நாகநந்தி, பரஞ்சோதியோடு வருவதும், கோட்டைக்கு உள்ளே நுழைவதும், எடுத்த எடுப்பிலேயே திடுக்கிடும் சம்பவம். கோட்டைக்கு உள்ளே நுழைவதற்கு அனுமதி வேண்டும். அதற்கு ஏற்பாட்டைச் செய்து இருக்கிறான் நாகநந்தி. உள்ளே வந்து விட்டான் பரஞ்சோதி.

ஆடுகிறாள் சிவகாமி

அவரவர்கள் பாதையில் அவரவர்கள் போகிறார்கள். பரஞ்சோதி போகிறான். முதல் அத்தியாயத்திலே இதனை அழகாகக் காட்டுகிறார். மகேந்திரவர்மன் சபையில் நாட்டிய அரங்கேற்றம் நடக்கிறது. நாட்டியத்தை அரங்கேற்றம் செய்வது யார்? நடனக் கலை அரசி, இந்தக் காவியத்தின் பெயரை யாருக்குச் சூட்டி இருக்கிறாரோ அந்த சிவகாமி. ஆயனர் மகள் சிவகாமி நாட்டியம் ஆடுகிறாள். நாட்டியம் நடந்து கொண்டு இருக்கிறபோதே, அவசரத் தகவல் வருகிறது மன்னருக்கு. அவர் எழுந்து போய்விடுகிறார்.

என்ன நாட்டியம்மத்த விலாசம் எழுதியவர் மகேந்திரவர்மன். வடமொழியிலும் பாண்டித்யம் பெற்றவர், அவரது இன்னொரு பெயர்மத்த விலாசர் என்றே உண்டு. அந்த நாடகத்தின் காட்சியை, நடனமாக சிவகாமி ஆடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தவருக்கு ஏதோ தகவல் வருகிறது. எழுந்து போய்விடுகிறார். பாதியில் முடிந்த காரணத்தினால், அங்கிருந்து ஆயனரும் மகளும், சிவிகையில் வருகிறார்கள்.

மதம் பிடித்த யானை ஒன்று ஓடி வருகிறது. பின்னாலே இருந்து சிவிகையை விரட்டிக்கொண்டு வருகிறது. பல்லக்கில், ஆயனரும் மகளும் வருகிறார்கள்.நீங்கள் ஓடி விடுங்கள், உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்என சிவிகை தூக்கிகளைப் பார்த்துக் கூறுகிறாள் சிவகாமி. கல்கி எவ்வளவு நுணுக்கமாக எழுதுகிறார் என்று பார்க்க வேண்டும். அவர்களாகப் போட்டுவிட்டு ஓடி விட்டார்கள் என்று சொல்லாமல், ‘நீங்கள் ஓடித்தப்பி, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், சிவிகையை இறக்குங்கள்என்று சொல்ல, பல்லக்கைத் தூக்கியவர்கள் விலகிக்கொள்ள, அதற்கு உள்ளாக யானை நெருங்கி விட்டது. இன்னும் கணப்பொழுதில், ஆயனரும் சிவகாமியும் யானையின் தாக்குதலுக்கு இரையாகி பலி ஆகி இருப்பார்கள்.

பொழுது போதாது

அந்த வேளையில், இவன் பார்க்கிறான். நம்ம கதாநாயகன் பரஞ்சோதி. யானை வரும்போதே பார்த்து விட்டான். இவனும் வரும்போதே வேல் கம்போடுதான் வந்து இருக்கிறான். அந்தக் கம்பில் வேலை மட்டும் தனியே எடுத்து, மூட்டைக்கு உள்ளே வைத்து இருக்கிறான். அந்த வேலின் திருகையை, கம்பில் பொருத்துகிறான். எல்லாம் ஒரு நிமிடத்திற்குள் நடக்கிறது. எந்தப் பயமும் இல்லை. யானை நெருங்கி வந்தவுடன், அவனுடைய பலத்தை எல்லாம் திரட்டி, யானை மீது வேலை வீசுகிறான். அது யானையின் கண்ணைப் பொத்திக்கொண்டு பாய்கிறது. உடனே யானை பயங்கரமாகப் பிளறிக்கொண்டே, யார் நம்மீது வேல் வீசியது என்று ஆவேசத்தோடு திரும்புகிறது. அது திரும்புவதற்குள் அந்தப் பாதையில் எதிர்த்து ஓடுகிறான் பரஞ்சோதி.

இப்படித்தான் இந்த அத்தியாயத்தைத் தொடங்கி, அதன்பின்னர் சிவகாமியின் சபதத்தின் ஒவ்வொரு செய்தியையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் சொன்னதையெல்லாம் கூறினால், இவர்கள் கூறியதுபோல வைகறைப் பொழுது வரை சொல்ல வேண்டியது இருக்கும்.

தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியைச் சொல்வதற்கு காரணம் உண்டு. அதன்பின்னர், ஆயனர் வீட்டிலேயே நாகநந்தியும் பரஞ்சோதியும் வருகிறார்கள். இதுவெல்லாம் கதையின் சுவாரஸ்யமான பகுதிகள், அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. டிரெய்லர் பார்க்கிறீர்கள் அல்லவா? ‘அதில் இதைப் பாருங்கள், இந்தக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்என்பார்கள். அதைப்போல நான் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்கிறேன்.

அஜந்தா ரகசியம் என்ன?

சிற்பங்களைப் படைத்துக் கொண்டு இருக்கிற மகாமேதை ஆயனருக்கு, அஜெந்தா ஓவியம் வண்ணத்தின் ரகசியம் அறிய வேண்டும் என்கின்ற ஆசை இருக்கிறது. 5000 ஆண்டுகள் ஆனாலும் அந்த அஜெந்தாவின் வண்ணம் குலையவில்லையே ,அதைப்பற்றிய ரகசியத்தை அறிய வேண்டும் என்ற ஏக்கம் கடைசி வரையிலேயே இருக்கிறது. இந்த நேரத்தில்தான் நாகநந்தி அடிகள் அஜெந்தா ஓவிய வண்ணத்தின் ரகசியத்தை அங்கே இருக்கக்கூடிய அஜந்தா மலையில் இருக்கிற, புத்தசங்கத்தில் இருக்கிற ஒருவரிடமும் தெரிந்துகொள்ளலாம், இங்கே இருந்து அதற்கு உரியவரை அனுப்பினால், அங்கே இருந்து தெரிந்துவரலாம் என்றார்.

உடனே ஆயனர், ‘அதைச் செய்து கொடுங்கள்என்ற நேரத்தில், ‘ஓலையோடு அனுப்பி வைக்கலாம், இந்தப்பிள்ளை அதற்குப் பொருத்தமானவன்என்று வேல் வீசிய பரஞ்சோதியை (அவனை எப்படி அழைத்துக்கொண்டு வந்தார் என்பது எல்லாம் கதையின் முக்கிய கட்டம்) அனுப்ப முடிவு செய்கிறார்கள்.

இப்படிப் பேசிக்கொண்டு இருக்கிறபோதே, குதிரையின் காலடிச்சத்தம் கேட்கிறது. மகேந்திரவர்மனும், நரசிம்மவர்மனும் அங்கே வருகிறார்கள். மகேந்திரவர்மச் சக்கரவர்தி உள்ளே வந்து விட்டார். இவர்கள் இரண்டுபேரும் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். அவர் பேச்சுக்கொடுத்துவிட்டுப் போகிறபோதே, இவர்கள் ஒளிந்து இருப்பதைப் பார்த்துவிட்டார். மகேந்திரவர்மன் கண்களுக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்காது. ஒரு குதிரை வேண்டும் அந்தக் குதிரையில் இந்தப் பிள்ளையை அனுப்பி அஜெந்தா ரகசியத்தை அறிந்து கொண்டு வரலாம் என்று ஆயனர் ஒரு குதிரை வேண்டும் என்று கேட்டார்.

எல்லாவற்றையும் முன்கூட்டியே ஊகிக்கக்கூடிய ஆற்றல் பெற்று இருக்கின்ற மகேந்திரபல்லவச் சக்கரவர்த்தி, ‘குதிரையைத் தருகிறேன்; குதிரை மட்டும் அல்ல; போகிற இடங்களில் அவரை அனுமதிப்பதற்கான அரசாங்க இலட்சினையும் தருகிறேன் எனத் தருகிறார்.

அஜெந்தா வண்ண ஓவியத்தின் ரகசியத்தை அறிவதற்காகக் கொண்டு போகிற கடிதத்தை, பரஞ்சோதி கொண்டு போகிறான். அவன் குதிரையில் தனியாகப் போகிறபோது, அமானுஸ்யமான இரவு நேரங்களில் இன்னொரு குதிரை வருகிற சத்தம் கேட்கிறது. ஒரு குதிரை பின்னாலே வருகிறதே என்று நினைத்து, ‘சரி பேச்சுத் துணைக்கு ஆயிற்றேஎன்று எண்ணிக் கொள்கிறான். பக்கதிலே ஒருவர் வருகிறார். நல்ல திடகாத்திரமான ஆஜானுபாகுவான தோற்றம். அவர் அருகிலே வந்தவுடன், அவர்கள் சந்திக்கிற காட்சி நன்றாக இருக்கும், ஏதோ பிசாசுதானோ என்று அலறி பயந்து அவன் தொபுக்கடீர் என்று கீழே விழுகிறான். நீ யார்?’ என்று வேலை எடுத்துக் கேட்கிறான். யானைமீது வீசிய வேல் அது. கடைசியில் மாமல்லர் கைகளுக்கல்லவா போய்ச் சேர்ந்து விட்டது!

ஓலை மாறியது

இந்தப் பயணத்திற்கு இன்னொரு வேல் கம்போடு வந்து இருக்கிறான். இந்த வேலை அவன் மீது வீசுகிறான். கண்மூடிக் கண் திறப்பதற்குள், வேலின் முனையைப் பற்றியவாறு கீழே விழுந்தவன் வேலினைச் சுழற்றுகிறான். பரஞ்சோதி தலைகுப்புற விழுந்தான். இவன் நம்மைவிட மகாபலசாலியாக இருக்கிறானே என்று நினைத்துக்கொண்டே கேட்டான், ‘நீ யார்? உனது பெயர் என்ன?’ என்று.
அவன் சொன்னான்; ‘எனது பெயர் வஜ்ரபாகுஎன்று.
எங்கே தங்கப் போகிறாய்?’ என்றார்.

இந்த மலையைத் தாண்டியதும் ஒரு மகேந்திர விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். அதில் தங்கலாமென்றிருக்கிறேன்என்றான் பரஞ்சோதி.
உடனே வீரபாகு சொல்கிறான். இப்படித்தான் நான் இராத்திரி போய்த் தங்கி இருந்தேன். திடீரென்று நாலைந்து பேர் என் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். என்னவென்று பார்த்தால், இடுப்பைத் தடவிக்கொண்டு இருந்தார்கள். நான் ஏதாவது ஓலை வைத்து இருப்பேன் என்று அந்த வஜ்ரபாகு சொல்கிறான்.

உடனே பரஞ்சோதி தடவிப் பார்க்கிறான், நம் ஓலை சரியாக இருக்கிறதா என்று. அதை வஜ்ரபாகு கவனித்துக்கொண்டான். இரவில் அவரவர்கள் அறைகளில் போய்ப் படுக்கச் சொல்லிவிட்டு, ‘காலையில் நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன்என்கிறார் வஜ்ரபாகு.

இவன் படுத்துத் தூங்குகிற இடத்தில் ஒரு விளக்கு எரிகிறது. அங்கே புகை வருகிறது. அந்தப் புகை மயக்கத்தைத் தரும். விளக்கு, ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்போமே, அதுமாதிரி புகை வருகிறது, மண்டுகிறது. பரஞ்சோதி அப்படியே தூங்கி விடுகிறான். உடன் வந்தவன், இவன் இடுப்பில் இருக்கிற ஓலையை எடுத்துப் படிக்கிறபோது அதிர்ச்சி அடைகிறான்.

அந்த ஓலை, சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கு எழுதப்பட்ட ஓலை. நீங்கள் சரித்திரத்தைச் சரியாகப் பார்த்தீர்களானால், கி.பி.600இல் இருந்து 630 வரை மகேந்திரவர்மன் காலம். கி.பி.630இல் இருந்து 668வரை நரசிம்மவர்மன் காலம். 620இல் நர்மதைக் கரையில் ஹர்ஷவர்த்தனின் பெரும்படைகளை, இரண்டாம் புலிகேசி தோற்கடித்தான். இத சரித்திரம். ஹர்ஷவர்த்தன் வடக்கே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தியவன். அவனுடைய படையைத் தோற்கடித்தவன் இரண்டாம் புலிகேசி. பெரிய வீரன். ஒவ்வொரு இடத்திற்கும் போய், செப்பு ஏடுகளைப் பார்த்து, கல்வெட்டுகளைப் பார்த்து, அஜெந்தா எல்லோரா குகைகளையும் போய்ப் பார்த்துவிட்டு வந்து கதையை எழுதியவர் கல்கி அவர்கள்.

இந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு, அதை அங்கேயே நெருப்பில் போட்டுவிட்டு, வேறு ஒரு கடிதத்தை எழுதி, அதை அங்கே வைத்துவிட்டு, போய்விடுகிறான் வஜ்ரபாகு. பர்ஞ்சோதி கடைசியாக சாளுக்கிய வீரர்களின் கைகளில் சிக்குகிறான். அவனைக் கொண்டு போகிறார்கள். பெரிய அதிர்ச்சி. கண்ணுக்கெட்டிய தூரம்வரை வராகக் கொடி பறக்கிறது. 5 இலட்சம் படைவீரர்கள், 15,000 யானைகள் என பிரமாண்டமான பெரும்படை.

இது சாளுக்கியப் படை அல்லவா? என்று மனம் கலக்கத்தோடு இருக்கிறபோது, இவனைக் கொண்டு போய்ப் புலிகேசிக்கு முன்னாலே நிற்க வைக்கிறார்கள்.
பரஞ்சோதிக்குத் தமிழ் மட்டுமே தெரியும். புலிகேசிக்கு அரைகுறைத் தமிழ் தெரிகிறது. பின்னால் சொல்கிறார்.
இவனை எப்படிக் கொண்டு வந்தீர்கள் என்கிறார்.
நான் ஓலை கொண்டு வந்தேன்என்றான். யாருக்கு?’ என்றபோது, ‘புத்த சாங்கியத்திலே இருக்கக்கூடிய ஒரு புத்த பிட்சுவுக்குஎன்றான்.
சரி ஓலையில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறபோது, அஜெந்தா வண்ண ரகசியத்தைப்பற்றி ஓலையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்று பார்த்து, இவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறபோது, ஏற்கனவே ஓலை கொண்டு வந்தான் அல்லவா, அவனைக் கொண்டு வாருங்கள் என்றார் புலிகேசி. வஜ்ரபாகு பத்திரமாக அங்கே வந்து அவன் ஏற்கனவே தயாரித்த ஓலையைக் கொண்டுவந்து கொடுத்து விட்டார்.

சாளுக்கியப் பேரரசைக் காஞ்சியில் கொண்டுவந்து நிலைநிறுத்த வேண்டும், பல்லவ நாட்டை உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டுத் தகவல் அனுப்பிய நாகநந்தியின் ஓலை, தீக்கு இரையாகிவிட்டது. வஜ்ரபாகு தான் எழுதிய ஓலையை, புலிகேசியிடத்தில் கொடுத்துவிட்டார். ஆக, அவனை அழையுங்கள் என்றவுடன், அவன் நம்முடைய படைகளுக்கு ஒற்றனாக உதவியாக இருப்பவன் என்று கருதி, அவனிடத்திலே கேட்டவுடன், இந்தப் பிள்ளையை வேங்கி நாட்டுக்கே கொண்டுசென்று விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறான் , புலிகேசியின் இன்னொரு சகோதரன் விஸ்ணுவர்த்தனன் வேங்கிக்குப் போய் இருக்கிறான் அல்லவா, அங்கு போகலாம் என்று சொல்லிவிட்டு, பரஞ்சோதியின் பக்கத்தில் வந்து, ‘தம்பி, கவலைப்படாதே. நாளை இராத்திரி உன்னைச் சந்திக்கிறேன்எனச் சொல்லிப் போகிறார்.

பரஞ்சோதியை 9 வீரர்கள் அழைத்துக்கொண்டு போகிறார்கள். போகிற வழியில் ஒரு மண்டபத்தில் அவர்கள் தங்குகிறார்கள். மண்டபத்திற்கு வெளியே வயதான கிழவன் இருக்கிறான். இராத்திரி ஆகிவிட்டது. பரங்சோதியை அந்த வயதான கிழவன் அழைக்கிறான்.
இங்கே வா. புறப்படு. இரண்டு குதிரை தயாராக இருக்கிறது. நீ ஒரு குதிரையில் உட்கார். நான் ஒரு குதிரையில் உட்காருகிறேன்என்றார். உன்னை எங்கே கொண்டு போகிறார்கள் தெரியுமா? நாகர்ஜூனா மலையில் கொண்டுபோய், அஜெந்தா வண்ண ரகசியம் பார்க்க அல்ல. உன் தலையைக் கொய்வதற்குஎன்று சொல்லி, ‘உடனே போய்விடுஎன்றார். சத்தம்போட்டுப் பேசுகிறான்.

தப்பிப் போகலாம் என்று சொன்னாயே, நீ இப்படிச் சத்தம்போட்டுப் பேசினால் அவர்கள் விழித்துக் கொள்வார்கள் அல்லவா? என்கிறான் பரஞ்சோதி. அதற்கு வஜ்ரபாகு, ‘அவர்கள் கண் விழித்து வரவேண்டும், ரகசியமாகத் தப்பிச் சென்றோம் என்று இருக்கக்கூடாது; வீரகுலத்தில் பிறந்த நமக்கு அப்படி அவமானம் வரக்கூடாதுஎன்று சொல்லி சத்தம் போட்டுவிட்டு இரண்டுபேரும் புறப்படுகிறார்கள்.

9 குதிரைகளும் பின்னால் விரட்டிக்கொண்டு வருகின்றன. அப்பொழுது சொன்னார் வஜ்ரபாகு. தம்பி 9 பேர் வருகிறார்கள். நீ அவர்களுடன் சேர்ந்து எமன் உலகத்திற்குப் போகிறாயா? என்னோடு சேர்ந்து அவர்களை எமலோகத்திற்கு அனுப்புகிறாயா?’ என்றான்.
நான் உன்னோடு சேர்ந்து போராடுகிறேன்என்று சொன்னான்.
சரி. வாளை எடு. ஈட்டியை ஒரு கையில் வைத்துக்கொள்என்கிறான். 9 பேரில் 5 பேரை வஜ்ரபாகு வெட்டி சாய்கிறார். 3 பேரை பரஞ்சோதி வெட்டிச் சாய்கிறார். எட்டுப்பேர் செத்துப்போய் விட்டார்கள். ஒருவன் தப்பி ஓடுகிறான்.

ஓடுகிறவன் முதுகிலே வஜ்ரபாகு வேலை வீசுகிறான், அவன் வீழ்கிறான். பரஞ்சோதிக்குத் தாங்க முடியாத கோபம். புறமுதுகு காட்டி ஓடுகிறவன்மீது நீ வேலை வீசுகிறாயே, நீ எல்லாம் சுத்த வீரனா?’ என்கிறான்.
அப்போது வஜ்ரபாகு சொன்னான்: அவன் இங்கே இருந்து தப்பிச்சென்று, நேரே புலிகேசியிடம் போய்ச் சொல்வான். என்ன ஆகும்?
ஒன்றும் ஆகாது. வடபெண்ணை ஆற்றங்கரையில் இருக்கிற புலிகேசி படை, நேரே காஞ்சிபுரத்திற்கு வரும் வந்தால்...?
என்ன வந்தால், காஞ்சிபுரம் உடனே அவன் கைக்குப் போய்விடும். தடுப்பதற்கு எந்த ஆயத்தமும் செய்யவில்லைஎன்று சொல்லிவிட்டு”, ‘எனக்கு மன்னரை நான்றாகத் தெரியும்என்கிறார்.
அப்ப என்னைப் படையில் சேர்த்து விடுகிறீர்களா?’என்றான்.
உன்னைப்போன்ற வீரர்கள்தான் வேண்டும் படைக்கு’.
நான் சக்கரவர்த்தியடம் சொல்லி உன்னை படையில் சேர்த்துவிடுகிறேன்என்றான்.
அங்கிருந்து வருகிறார்கள். வஜ்ரபாகு முன்னால் சென்றுவிட்டான். பின்னால் பரஞ்சோதி வருகிறான்.
பல்லவ சேனாதிபதி கலித்தொகையார் இருக்கக்கூடிய படை முகத்திற்கே வருகிறார்கள். சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போனான் பரஞ்சோதி.
மகேந்திர பல்லவர் வாழ்க, சக்கரவர்த்தி வாழ்கஎன்று சத்தம் கேட்கிறது. உள்ளே போகிறான்.

மகேந்திரரின் ஆற்றல்
வஜ்ரபாகுதான், மகேந்திரபல்லவர். இந்தக் காப்பியத்தில் மகேந்திரபல்லவரின் ஆற்றல் - மதிநுட்பம் - வீரம் - ராஜதந்திரம் - சூழ்ச்சியை விவரிக்கிறார் கல்கி. பாரத யுத்தத்தில் கண்ணனின் சூழ்ச்சியால்தான் கெளரவர்கள் வீழ்ந்தார்கள். அதனால்தான் கெளரவர் படை சாய்ந்தது. துரியோதனனும் வீழ்ந்தான்.

இங்கே மகேந்திரபல்லவச் சக்கரவர்த்தியின் சாமர்த்தியத்தினாலும் சூழ்ச்சியாலும்தான் வடபெண்ணை ஆற்றங்கரையிலேயே எட்டு மாத காலம், சாளுக்கியப் படை அங்கேயே காத்து இருக்கிறது. என்னவென்றால், ‘இப்பொழுது நீ வரவேண்டாம். உரிய நேரம் வரட்டும் சொல்லி அனுப்புகிறோம். இப்போது பாண்டிய நாடும், பல்லவ நாட்டுக்கு உதவியாக இருக்கிறது. இப்போது நீ படை எடுத்து வந்துவிடாதேஎன்று எழுதி, உரிய நேரம் வரும்போது சொல்கிறோம் என்று பொய்யான கடிதத்தை புலிகேசியிடம் மகேந்திரவர்மரே கொடுத்து அவனும் அதை நம்பி விட்டதால், சாளுக்கியப் புலிகேசி அங்கேயே இருந்து விட்டான். ஏறத்தாழ வடபெண்ணை ஆற்றங்கரையிலேயே படை நின்று விடுகிறது. ஒரு வீரனாக வந்த பரஞ்சோதி, எட்டு மாதங்கள் கழித்து ஒரு படைத்தலைவனாக வருகிறான்.

கல்கியின் வெற்றி

இந்தச் சம்பவங்களுக்கு மத்தியில்தான், இந்த அமரகாவியத்தின் நெடுகிலும் இழையோடி இருப்பது உண்மையான காதல் - தூய்மையான அன்பு. அது கற்பனைதான். ஆனாலும் அந்தக் காதல் இதை ஒரு அமரகாவியமாக ஆக்கிவிட்டது.

இங்கே வரவேற்று உரை ஆற்றிய பாரதி அவர்கள், ‘இந்த முடிவு சரிதானா?’ என்று கேட்டார். அந்தக் கேள்வியை எழுப்பியதுதான் கல்கிக்கு வெற்றி.

அந்த முடிவை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை வாசகர்களால். சோக காவியங்கள்தான் அமரகாவியங்களாக ஆகின்றன. ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் ஆகட்டும்; லைலா மஜ்னுவாகட்டும்; வங்க இலக்கியத்தில் படைக்கப்பட்ட தேவதாஸாக இருக்கட்டும்; தமிழர்கள் நம்பிக் கொண்டு இருக்கிற அமராவதி அம்பிகாவதி கதையாக இருக்கட்டும், சோக காவியங்கள்தான் நிலைத்து நிற்கின்றன.
இதில், மாமல்லருக்கும்-சிவகாமிக்கும் காதல், ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள். மகேந்திரச் சக்கரவர்த்தி இதைக் கண்டு கொண்டார். மாமல்லன் உள்ளத்தில் சிவகாமி, அந்த சிவகாமியின் நெஞ்சினில் தனது மகன் மாமல்லன் என்று புரிந்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் தாமரைக் குளத்தில், மகிழ மரத்துக்கு அடியில், அவர்கள் சந்தித்து அளவளாவுவதும், காதல் கடிதங்களைப் பரிமாறுவதும், அந்தக் கடிதங்களை சிவகாமி படித்துவிட்டு, மகிழ மரத்துப் பொந்தில் வைப்பதும், அதை எடுத்து நாகநந்தி படிப்பதும், அவனுடைய மூச்சுக்காற்றில் நெருப்பு பறப்பதும், இத்தனைக்குப் பிறகும் அதே கடிதங்கள் ஒற்றர் தலைவன் சத்ருகனன் அந்தக் காதல் கடிதங்களை மகேந்திரவர்மன் கையில் கொடுப்பதும் விறுவிறுப்பான காட்சிகள்.

அப்பொழுது சொல்கிறார்; மகேந்திரர். ராஜ்யபாரம் என்பது கொடுமையானது, என் பிள்ளையின் இதயத்தை கீறுகின்ற வேலையில் நான் ஈடுபட வேண்டியது இருக்கிறதே, இந்த நாட்டை நான் காப்பாற்ற வேண்டுமே, அந்தப் பிஞ்சு உள்ளத்தில் வேல் கொண்டல்லவா நான் குத்தப் போகிறேன்என்று வேதனைப்படுகிறார்.

இந்தக் காலகட்டத்தில், மகேந்திரவர்மனின் வரலாற்றுச் சரித்திரத்தை சொல்கிறார். அப்பர் அடிகளின் வாழ்வில், சமணர்களின் ஆதிக்கத்திலே இருந்த மகேந்திர பல்லவர் சைவ சமயத்திற்கு மாறினார்.
அந்தத் திருநாவுக்கரசர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். அவரைச் சந்திக்க ஆயனரும் சிவகாமியும் வருகிறார்கள். எங்கே? ஏகாம்பரநாதர் கோயிலில் பார்த்து, திருநாவுக்கரசர் மடத்திலும் சென்று பார்கிறார்கள். நாவுக்கரசரின் முன்னால் சிவகாமி நடனம் ஆடுகிறாள். அப்படி ஆடுகிறபோது, நாவுக்கரசரின் திருவாரூர் தாண்டகத்தில் இருந்து ஓர் அருமையான பாடலை பழம் பஞ்சரம் என்னும் பண்ணில் அமைத்துப் பாடினாள். பின் அப்பாடலைப் பாடிக்கொண்டே நடனம் ஆடினாள்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனுடைய வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆருர் கேட்டாள்

எனும் பாடல்தான் அது.

தன்னை மறந்து, அந்தப் பாடலோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆடுகிறாள் சிவகாமி. அவளது நெஞ்சில் அந்த மாமல்லன் ஒருவரே இருக்கிறார். இதே பாடல் இக்காவியத்தின் நிறைவில் வருகிறது. இப்பொழுது திருநாவுக்கரசருக்கு முன்னால் பாடி ஆடுகிறபோது, இதயத்திற்கு உள்ளே வீர மாமல்லன் மட்டுமே இருக்கிறார்.

தெய்வீக கலை

நாவுக்கரசர், ஆயனரிடம் சொல்கிறார்; ‘இவள் கலை, தெய்வீகக் கலை. தில்லைப் பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் இறைவனுக்கே அர்ப்பணமாக வேண்டிய அற்புதக் கலை இது. எனக்கு ஏதோ மனதில் துயரம் ஏற்படுகிறது. ஆயனரே, இந்தப் பெண்ணைப் பார்க்கிறபோது, இவளுக்கு ஏதோ பெரிய துக்கம் நேரப்போகிறது என்று என் உள்ளம் சொல்லுகிறதுஎனக் கண்ணீர் மல்க நாவுக்கரசர் கூறுகிறார்.

முற்றுகை

இந்தக் காப்பியத்தில் கோட்டை முற்றுகை வருகிறபோது தயாராக இருக்க வேண்டும் என்று கோட்டையைத் தயார் செய்தாகி விட்டது. எட்டு மாத காலத்தில் கோட்டை வலுவாக்கப்படுகிறது. பரஞ்சோதியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

15,000 பேர் யானைகளோடு வருகிறானே புலிகேசி. யானைகள் இரும்பு உலக்கைகளைக் கொண்டு இடிப்பதற்கு வரும் அல்லவா, அப்பொழுது விஷம் தோய்ந்த அம்புகள் பாயும். பரஞ்சோதி எப்படி வேல் எறிந்தானோ, அதைப்போல அம்புகள் பாயும். அப்போது யானைகள் திரும்பி தன்னோடு வந்தவர்களையே தாக்கும். பலமான கட்டுக்காவல், கோட்டைக்குப் பாதுகாப்பு. ஒரு இலட்சம் வீரர்களை உள்ளே திரட்டியாகி விட்டது.
இவ்வளவும் தயார் செய்து வைத்து இருக்கிறவரைக்கும்-நாகநந்தி வரவில்லை. ஏன் இன்னும் வரவில்லை? இரட்டைப் பிள்ளைகளாக, நாகநந்தியின் உடன்பிறந்தவன்தான் இரண்டாம் புலிகேசி.

நாகநந்தி என்ன திட்டம் போட்டு இருக்கிறான் தெரியுமா? படிக்கும்போதே குலை நடுங்குகிறது. பாம்புக்குகை. அதற்கு உள்ளே நாகங்கள் இருக்கிறன்றன. அந்த நாகங்களின் விஷத்தை கொண்டுவந்து, காஞ்சியில் தண்ணீரில் கலந்துவிட்டால் மக்கள் அந்த நீரைப்பருகி இறந்து விடுவார்கள்.பாம்புக்குகையில் போய் நிற்கின்றான் நாகநந்தி. சீறுகின்ற நாகங்கள்.

அதே கட்டத்தில், இந்த வேளையில், கோட்டைக்கு உள்ளேதான் நீ இருக்க வேண்டும், வெளியே வரக்கூடாதுஎன்று மாமல்லருக்கு உத்தரவு இட்டுவிட்டுத்தான் போகிறார் மகேந்திரச் சக்கரவர்த்தி.

மாமல்லனின் கோபம்

கொதிக்கிறான் மாமல்லன். என்னைக் கோட்டைக்கு உள்ளே இருக்கச் சொல்கிறீர்களே? எவ்வளவு பயங்கொள்ளி என்று என்னை இழிவாகப் பேசுவார்கள். வீரபல்லவ குலத்தில் ஓடுகிற இரத்தம்தானே எனது உடம்பில் ஓடுகிறது. எதிர்த்துச் செல்வோம். புலிகேசி இருக்கிற இடம் தேடிச் செல்வோம். போரில் அவனைச் சந்திப்போம் எனக் குமுறுகிறான் மாமல்லன். வள்ளுவன் வகுத்த அந்த நெறிகளை எல்லாம் உணர்ந்தவர் அல்லவா மகேந்திரர். எதிரியின் பலம், நம்முடைய பலம், துணைவலிமை, காலம் அறிதல், இடம் அறிதல், இவை அனைத்தையும் உணர்ந்தவர் அல்லவா மகேந்திர பல்லவர். ஆகவேதான், வடபெண்ணை போய்த் திரும்பும் வரையில் நீ கோட்டையை விட்டு வெளியே வரக்கூடாது என்று, சத்தியம் வாங்கி விட்டார்.

மிகுந்த வேதனையோடு மாமல்லர் சிவகாமியிடத்தில் சொல்கிறார்: எனக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்து விட்டார். உன்னை வந்து பார்க்க முடியவில்லை. இந்திரன் என்னைக் கொண்டு போய் தேவலோகத்தில் வைத்து இருந்தாலும், அந்தக் கட்டுக்காவலை மீறி வருவேன். ஆனால், மகேந்திரச் சக்கரவர்த்தி அல்லவா உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அதை மீறி வர முடியவில்லை. இரண்டு பேரை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டுவிட்டார். ஒன்று என் காதல் ராணியாகிய உன்னைச் சந்திக்க விடாமல் செய்து விட்டார். போர்க்களத்திலே வாள் ஏந்திச் சென்று, வெற்றித் தேவதையின் மாலையை வாங்குகிற வாய்ப்பை என்னிடம் இருந்து பறித்து விட்டார்என்று உணர்ச்சிமயமாகப் பேசுகிறார்.

நரசிம்மருக்கு இட்ட பணி

எட்டு மாதம் கழிந்தது. கோட்டைக் காவல் வலுப்பெற்றது. திருப்பாற்கடல் என்கிற மிகப்பெரிய ஏரியை உடைக்கிறான் நாகநந்தி. அந்த ஏரியை உடைக்கிற இடத்திற்கு, ஒற்றர் தலைவன் சத்ருகனன், உதவியாளன் குண்டோதரனுடன் வருகிறான். எங்கே பார்த்தாலும் வந்து நிற்கும் மகேந்திர பல்லவர், அங்கும் வந்து விடுகிறார். எனக்கு நல்ல ஆயுதத்தை இந்தப் பிட்சு கற்றுக் கொடுத்து விட்டான் என்கிறார் மகேந்திரர்.

இந்த ஏரியை உடைப்பதைப் பார்த்தவுடன், புலிகேசியை வெல்வதற்கு எனக்கு ஒரு ஆயுதம் கிடைத்தது என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். இந்தக் கட்டத்தில் மகனுடைய வேதனையையும் உணர்ந்து, தன்னுடைய பல்லவ நாட்டு மக்களுக்கு, நாம் அடங்கி ஒடுங்கி உள்ளே இருந்தோம் என்கிற உணர்வு வரக்கூடாது, ஒரு வீரப் போர்க்களத்தைக் காட்டி வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்று எண்ணுகிறார் மகேந்திர பல்லவர்.

கங்க நாட்டுத் துர்விநீதன் இந்தச் சந்தர்ப்பம் பார்த்து வருகிறானே புலிகேசிக்கு உதவி புரிய, அவனுக்கு எத்தனை உதவி செய்தது பல்லவ நாடு. அதை மறந்து துரோகியானவன் படையுடன் வருகிறான். அவனிடத்தில் 50,000 படைகள் இருக்கின்றன. அதை எதிர்த்துச் செல்வதற்கு மாமல்ல இளவரசர்க்கு உத்திரவிடுகிறார். நீயும் பரஞ்சோதியும் புறப்பட்டு, கங்க நாட்டு துர்விநீதனுக்குப் பாடம் கற்பியுங்கள்என்கிறார்.

பொறுக்கி எடுத்த குதிரை வீரர்கள் 10,000 பேரோடு சென்று, புல்லலூர்ப் போர்க்களத்தில் துர்விநீதனைத் தோற்கடிக்கிறார் மாமல்லர்.
அதைத்தான் சொல்கிறார் மாமல்லர். நானும் பரஞ்சோதியும் வாள் வீசியதால் மட்டும் வெற்றி பெறவில்லை. சரியான வேளையில், ஒரு 1,000 பேர்கொண்ட குதிரைப்படை இன்னொரு பக்கம் வந்து தாக்கியது. மகேந்திர பல்லவர் அங்கேயும் வந்து போரிட்டார்என்றார், மகனைப் போர்க்களத்திற்கு அனுப்பினாலும், அந்தப் போரில் முழு வெற்றி அடைந்து, தன் நாட்டு மக்ளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்று, அவரும் ஒரு பக்கத்தில் வந்து தாக்க, துர்விநீதன் படை சிதறி ஓடுகிறது. வெற்றி பெற்று வருகிறார்கள் பல்லவர்கள்.

மாமல்லர் - சிவகாமி சந்திப்பு

திருப்பாற்கடல் உடைந்து வருகிறது. எங்கும் வெள்ளத்தில் மிதக்கிறது ஊர்கள். அந்த நேரத்தில் மண்டபப்பட்டு கிராமத்துக்கு மாமல்லனும் பரஞ்சோதியும் வருகிறார்கள். மண்டபப்பட்டுக்கு ஒரு முறை மல்லை சத்யாவுடன் நான் சென்று இருந்தேன். பாலவாக்கம் சோமு அழைத்துக் கொண்டு சென்றார். அப்பொழுது என் மனம் முழுவதும், சிவகாமியின் சபதத்திலேயே இருந்தது. ஏனென்றால், அந்த மண்டபப்பட்டு கிராமத்திற்குத்தான் ஆயனரும், சிவகாமியும் வருகிறார்கள். மாமல்லரும் வருகிறார். யாருக்கும் தெரியாது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்திக்கிறார்கள். தண்ணீரில் தெப்பத்தில் ஏறிவந்து, அந்த மோனமான நிலவின் வெளிச்சத்தில் காதல் மொழி பேசுகிறார்கள். இந்த வேளையில், மாமல்லர் மீது விஷக்கத்தியை எறிவதற்கு புத்த பிட்சு முயற்சிக்கிறார். ஆனால், அது சிவகாமியின் மீது பட்டுவிடுமோ என்று கருதி, விஷக்கத்தியை வீசவில்லை.

கடைசியில் அந்த விஷக்கத்தியை குண்டோதரன் மீது வீசுகிறபோது, அவன் எடுத்துக் கொண்டுபோய் மகேந்திர பல்லவரிடம் கொடுத்தான். இந்தக் கத்தி, இளவரசர் மேல் பாய இருந்தது. பாய்ந்தால் அவரைக் காப்பாற்ற முடியாது. ஆலகால விஷம் என்கிறான். இந்தச் சூழ்நிலையில் கோட்டையை நோக்கிச் சாளுக்கியப் படை கடல்போல் வந்துகொண்டு இருக்கிறது. நாகநந்தியையே பயன்படுத்த வேண்டும் எனத் திட்டமிடுகிறார் மகேந்திர பல்லவர்.

மகேந்திரரின் திட்டம்

ஆயனரிடத்திலே போய்ச் சக்கரவர்த்தி சொல்கிறார்: கோட்டை முற்றுகை நடக்கப்போகிறது. நீங்கள் கோட்டைக்கு உள்ளே சென்று பத்திரமாக இருக்க வேண்டும். முக்கியமான தேவைக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்என்று சொல்லி, சிங்க முத்திரை பொறிக்கப்பட்ட இலட்சினையை ஆயனரிடம் கொடுக்கிறார்.

ஆயனர் அதைக் கொண்டு போய் சிவகாமியிடம் கொடுக்க, அவர் வாங்கி பத்திரமாக வைக்கிறார். மறுநாள் பார்த்தால், அதைக்காணோம். திட்டமிட்டுச் செய்கிறார் மகேந்திரபல்லவர். இந்த சிங்கமுத்திரை இருக்கிறது அல்லவா இது 12 பேர்களிடத்தில்தான் இருக்கிறது பல்லவ நாட்டில்! அதில் ஒன்று நாகநந்தி கைகளில் கிடைக்கட்டும் என்று வைத்துவிட்டுப் போய்விட்டார்.

பரஞ்சோதிக்குக் கடிதம் வருகிறது. இன்று இரவுக்குள் எல்லோரும் கோட்டைக்கு உள்ளே சென்றுவிடுங்கள். குறுநில மன்னர்கள் கோட்டையைவிட்டு வெளியே சென்று, காஞ்சி பகுதிகளில் அவரவர்கள் பகுதிகளைப் பாதுகாக்கச் சென்றுவிடட்டும். நான் இந்த இரவுக்குள் வந்துசேராவிட்டால், புத்த பகவானைத் தியானம் செய்யவும்என்று சக்கரவர்த்தி எழுதுகிறார்.

இதில் என்ன அர்த்தம் என்று யாருக்கும் புரியாது. புத்தபகவானைத் தியானம் செய்ய வேண்டும் என்றால், அந்த புத்த பகவான் சிலைக்குக் கீழே ஒரு சுரங்கம் இருக்கிறது. அந்த வழி வருவேன் என்ற அர்தத்தில் எழுதி இருக்கிறார்.

மாமல்லரும், பரஞ்சோதியும் கோட்டைக்கு உள்ளே சென்றுவிட்டார்கள். மூன்று காத தூரத்தில் சமுத்திரம் போன்ற சாளுக்கிய சேனை வருகிறது. சக்கரவர்த்தி வந்து சேரவில்லை. மந்திர ஆலோசனைக் கூட்டம், நடுச்சாமத்தில் நடக்கிறது. முதல் மந்திரி சாரங்கத் தேவ பட்டர் முதல் அமைச்சர் ரணதீரபல்லவராயர், சேனாதிபதி கலித்தொகையார் எல்லோரும் கூடிப்பேசுகிறார்கள். கலித்தொகையார் என்றவுடன் நீங்கள் நாவுக்கரசரின் தமக்கையார் நெஞ்சில் இடப்பெற்ற அந்தக் கலித்தொகையார் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். அவர் முந்தையப் போரில் இறந்து விட்டார். அதனாலேயே திலகவதி அம்மையார் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்தார்கள். இதைத்தான் குறிஞ்சிமலரில் நா.பார்த்தசாரதி அவர்கள், மணிவண்ணன் என்ற பெயரில் எழுதியபோது இதையே சுட்டிக்காட்டி எழுதினார்.

மந்திர ஆலோசனை

மந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சக்கரவர்த்தி இன்னும் வரவில்லையே? எங்களுக்கு முன்பே புறப்பட்டாரே?’ என்று இளவரசர் கேட்கிறார்.

கோட்டைத் தலைவர்கள் எல்லாம் விடிவதற்குள் வெளியே போய்விட வேண்டும். சூரிய உதயத்திற்குள் புலிகேசியின் படைகள் வந்துவிடும். கோட்டை முற்றுகை ஆரம்பித்துவிடும். இப்பொழுது என்ன செய்யலாம்? சொல்லுங்கள் ஆலோசனைஎன்கிறார்.

அப்பொழுது மாமல்லர் கேட்கிறார்: வடக்கே போருக்குச் செல்லும்போது, சக்கரவர்த்தி என்ன ஆணை இட்டார்? நான் வெளியேபோய் இருக்கிற காலத்தில், ஒருவேளை நான் திரும்பாவிட்டாலும் முடிவு எடுக்கிற சகல அதிகாரங்களையும் என் மகனுக்கு நான் தருகிறேன் என்றார் அல்லவா? அந்த அடிப்படையில் இங்கே நான் முடிவு எடுக்கலாமா? என்று கேட்கிறார்.
அதற்கு அவர்கள், ‘நாங்கள் எங்கள் கருத்துக்களைச் சொல்கிறோம். அதற்குப்பிறகு முடிவு எடுங்கள்என்றார்கள். அவர்களது கருத்துக்களைக் கேட்கிறார். ஒவ்வொருவராகச் சொல்கிறார்கள். கோட்டைக்கு வெளியே போய்ச் சண்டை போடக் கூடாது, இதுதான் சக்கரவர்தியின் விருப்பம். எதிரியின் பலம் அதிகம்என்றவுடன், கோபம் பொத்துக்கொண்டு வருகிறது மாமல்லருக்கு.

படையெடுத்து வரும் பகைவர்களுக்குப் பயந்து கோட்டைக்கு உள்ளே ஒளிந்து கொள்வது என்பது பல்லவ குலத்துக்கு என்றும் அழியாத அவமானத்தை உண்டாக்கக் கூடியது. தொண்டைமான் இளந்திரையன் வழி வந்த வீரபல்லவ வம்சத்துக்கு இந்த மாபெரும் களங்கம் என்னுடைய காலத்தில் ஏற்படுவதை நான் ஒருநாளும் சகிக்க முடியாது. இந்தக் கோட்டைக்கு உள்ளே இன்று சுமார் ஒரு இலட்சம் பல்லவ வீரர்கள் போருக்குத் துடிதுடித்துக் கொண்டு காத்து இருக்கிறார்கள். பல்லவ வீரர்கள் ஒவ்வொருவனும் சாளுக்கிய வீரர் ஒன்பது பேருக்கு ஈடானவன்-போர்க்களத்தில் வெற்றி அளிப்பது ஆட்களின் எண்ணிக்கை அல்ல - வீரம்தான் வெற்றி தரும். புள்ளலூர் சண்டையில் நமது 10,000 வீரர்கள், ஐம்பதாயிரம் கங்க வீரர்களைப் புறங்காட்டி ஓடும்படிச் செய்யவில்லையா?”
நம்மிடம் ஒரு இலட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். அந்த வேல்களும் வாள்களும். தாகம் தாகம்என்று சாளுக்கியர்களின் இரத்தத்தைக் குடிப்பதற்குத் துடித்துக்கொண்டு இருக்கின்றன. எனவே, கோட்டைக்கு வெளியே சென்று நாம் தாக்க வேண்டும்என்று மாமல்லர் கர்ஜனை புரிந்தார்.

நாகநந்தியின் சதி

இந்த வேளையில், இரத்தக் காயங்களுடன் ஒரு தூதன் வருகிறான். நல்ல தோற்றம், ஆறடி உயரத்தில். அவன் சக்கரவர்த்தியிடம் இருந்து ஓலை கொண்டு வந்து இருக்கிறேன்.
என்ன செய்தி? என்கிறார் மாமல்லர்.
புள்ளலூர்ப் போர் புரிந்து உங்களை அனுப்பிவிட்டு, வாதாபி படை எவ்வளவு தொலைவில் வருகிறது என்று பார்ப்பதற்காக மகேந்திரவர்ம சக்கரவர்த்தி சென்றார்கள். சென்ற இடத்தில் வாதாபி வீரர்களால் கைது செய்யப்பட்டார்.என்கிறான்.
இந்தப் பயங்கரச் செய்தியைக் கேட்டவுடன், அத்தனை பேரும் அலறுகிறார்கள், கூக்குரலிடுகிறார்கள்.
என்ன? சக்கரவர்த்தி சாளுக்கிய வீரர்களிடம் சிறைபட்டாரா? அப்படிச் சொல்லும்போதே மாமன்னரின் கை அவரது வாள் மீது செல்கிறது.
இந்த ஓலையைக் கொண்டு வந்த இவன் சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் என்று முதல் அமைச்சர் கேட்க, “சக்கரவர்த்தியே சிறைப்படுத்தப்பட்டார். நீங்கள் ஆராய்ச்சியா செய்து கொண்டு காலம் கடத்துகிறீர்கள். இப்போதே வடதிசை நோக்கிப் புறப்படப் படைகள் ஆயத்தமாகட்டும். களத்துக்குப் புறப்படுங்கள்என்று மாமல்லர் ஆணையிடுகிறார்.

எனக்கு ஒற்றர்படைத் தலைவன் சத்ருகனனிடம் வேலை இருக்கிறதுஎன்று, இந்தத் தகவலைச் சொன்னவன் வெளியே செல்கிறான். வெளியே ஆரவாரம் கேட்கிறது. சக்கரவர்த்தி வந்துவிட்டார், சக்கரவர்த்தி வந்துவிட்டார்என்கிறார்கள். மகேந்திர பல்லவச் சக்கரவர்த்தியே வருகிறார்.

நாகநந்திதான் தன் உடம்பில் போலியாக காயங்களை ஏற்படுத்திக்கொண்டு, இப்படி ஒரு தகவலைக் கொடுத்து, கோட்டைக்கு வெளியே படைகளைக் கொண்டுவரவேண்டும் என்று திட்டமிட்டவன். நல்லவேளையாக சக்கரவர்த்தி வந்தார். நாகநந்தி கைது செய்யப்பட்டு, பாதாளச் சிறையில் அடைக்கப்படுகிறான்.

வாக்குவாதம்

அதற்குப்பிறகு மீண்டும் மந்திர ஆலோசனை கூடுகிறது.
இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார்கள்.
அப்பொழுது உணர்ச்சிப் பொங்க எரிமலையாக வெடிக்கிறார் மாமல்லர். அவமானம்! அவமானம்! கோட்டைக்கு உள்ளே ஒளிந்து கிடக்கக்கூடாது வீர பல்லவ குலம். எதிர்த்து நின்றுபோரிட வேண்டும்என்கிறார் அப்பொழுது தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது.

புவனமாகதேவி, மகேந்திரபல்லவரின் பட்டமகிஷி. அந்த இராத்திரியில் கேட்கிறார். என்ன அப்பாவும் பிள்ளையும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் கடுமையாகச் செய்தீர்களாமே?’ என்கிறாள்.
கண்களில் வழிகிற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே மகேந்திர பல்லவர் சொல்கிறார். இந்த 600 ஆண்டுகள் வீர பல்லவ குலத்தில், இப்படி ஒரு வீரமகனைப் பெற்றேனே என்றுதான் புளங்காகிதம் அடைகிறேன். மாமல்லன் மகா வீரன். அவன் பேசிய ஒவ்வொரு பேச்சும், எனக்கே ஒருவேளை அவன் சொல்லைக் கேட்டு விடுவேனோ என்பதைப்போல ஆகிவிட்டதுஎன்கிறார்.

நாகநந்தி கொடுத்து அனுப்பியதாக, புலிகேசிக்கு இன்னொரு ஓலை போகிறது. அந்த ஓலையில், ‘கோட்டை மிக பலமாக இருக்கிறது. பாண்டிய மன்னனோடு பல்லவன் உடன்பாடு செய்ய இருக்கிறான். ஜெயந்தவர்ம பாண்டிய மன்னன்தான் என்னைச் சிறைபிடித்தவன். இடையில், இப்பொழுது தப்பி வந்து விட்டேன். ஆகவே, கோட்டை முற்றுகை இப்போது பயன்தராது. அதிக நாள்கள் நீடிக்கும். நமது படைகளுக்கும் உணவு வேண்டும். யோசித்துக்கொள்என்று எழுதி ஒரு கடிதம் வருகிறது.

இந்த ஜெயந்தரவர்ம பாண்டிய மன்னனுக்கு ஒரு கண் இருக்கிறது பல்லவ நாட்டின் மீது. அவன் மகன்தான் நெடுமாறன் பாண்டியன். குலச்சிறை நாயனார் அமைச்சராக இருந்தபோது, மன்னாக இருந்தவன். அவன் தந்தைதான் ஜெயவர்மன். புலிகேசி, ஜெயந்தவர்மனைச் சந்தித்து அவனோடு உறவு கொள்வதற்கு முயற்சிக்கிறான்.

காஞ்சிக்குள் புலிகேசி

இந்தச் சூழலில், முற்றுகை வெற்றி பெறாது என்ற நிலையில், சாளுக்கரின் சமாதானக் கொடி உயர்கிறது புலிகேசியிடமிருந்து. சமாதானம் செய்துகொண்டு காஞ்சிபுரத்தைப் பார்த்துவிட்டு, உங்களைச் சந்தித்துவிட்டுப்போக விரும்புகிறேன்என்று மகேந்திரவர்மனுக்கே கடிதம் வருகிறது.

இதுதான் ரெம்ப முக்கியம். மகேந்திரவர்மன் ஆலோசனை கேட்கிறார். எந்தக்காரணத்தை முன்னிட்டும் சாளுக்கியப் புலிகேசியை உள்ளே அனுமதிக்கக் கூடாதுஎன்கிறார் மாமல்லர்.
அப்பொழுது, மகேந்திரவர்மன் சொல்கிறார். வடக்கே ஹர்ஷவர்த்தனன் பேரரசன். இடையில் சாளுக்கியப் புலிகேசி ஒரு பேரரசன். இங்கே பல்லவப் பேரரசு இவையாவும் ஒற்றுமையாக இருந்தால் நல்லதுதானே? கலைகள் வளரும் அல்லவா?

அஜெந்தாவுக்குப் போகவேண்டும் என்று எனக்கே ஆசை இருக்கிறதே. விருந்தோம்பும் பண்பு நமக்கே உரியதுதானே? தன்னைத் தேடி, நாடி வருகிறவனை நாம் அழைக்கலாமே என்று முடிவு எடுக்கிறார்.
புலிகேசி கோட்டைக்கு உள்ளே வந்தால், நான் கோட்டையைவிட்டு வெளியேறுவேன்என்று இளவரசர் சொல்கிறார்.

சரி, பாண்டியனுக்கும் ஒரு புத்தி கற்பிக்க வேண்டும். கொள்ளிடக் கரையில் இருக்கிறான் ஜெயந்தவர்ம பாண்டியன். பொறுக்கி எடுத்த 30,000 வீரர்களோடு சென்று பாண்டியனுக்குப் பாடம் புகட்டி விட்டுத் திரும்பி வா. பரஞ்சோதி உடன் செல்லட்டும் என்று கோட்டையில் இருந்து, மாமல்லரை அனுப்பி விட்டார் பல்லவச் சக்கரவர்த்தி.

கோட்டைக் கதவுகளைத் திறந்து புலிகேசியை வரவேற்கிறார். புலிகேசி சுற்றிப் பார்க்கிறான். காஞ்சியின் செளந்தர்ய மாளிகைகளைக் கண்டு மனம் வெதும்புகிறான். பொறாமைத் தீ மனதில் எரிகிறது. எட்டாவது நாள் விடைபெற்றுப் போகிறபோது, சபையில் அவருக்கு ஒரு வழி அனுப்பு விழா நடத்துகிறார்கள். அங்கே சிவகாமி நடனம் ஆடுகிறாள். சிவகாமியின் நடனத்தைப் பற்றியும், தமிழகக் கலைகளையும் பற்றி உயர்வாகச் சொல்கிறார் மகேந்திரர்.

அப்போது சாளுக்கியப் புலிகேசி சொல்கிறான், ‘என்ன கலைஞர்களை இவ்வளவு மதிக்கிறீர்கள்? எங்கள் ஊரில் சவுக்கால் அடித்துத்தான் நாங்கள் ஆடச் சொல்வோம்என்கிறான். அவன் மனதிற்குள் பொறாமைத் தீ வளர்கிறது.

விடைபெற்றுப் போகும்போது, விதி மகேந்திர பல்லவரின் நாக்கில் வந்து உட்கார்ந்து கொண்டது. அதாவது, அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பேசவேண்டும். தமிழ் எழுத்து எவ்வளவு வல்லமை வாய்ந்தது தெரியுமா?

கொண்டு வருகஎன்று சொல்ல வேண்டிய பாண்டிய மன்னன், ‘கொன்று வருகஎன்று சொன்னதால், குவலயம் போற்ற வாழ வேண்டிய அந்த மணிவேந்தன், தன் உயிரையும் தந்து, மாமதுரையும் எரிந்தது என்ற சொல்லுக்கே காரணம், ஒரு எழுத்துதானே!

வார்த்தை தவறி விட்டால்...

உலகம் போற்றுகிற ஆசிய ஜோதிநேரு இலங்கைக்குச் சென்று இருந்தார். அவர் எழுதிய உலகச் சரித்திர கடிதங்கள், ஒப்பற்ற இலக்கியம். சமாதானம் தழைக்க வேண்டும். எங்கே? ‘சீனத்திற்கும்-இந்தியாவுக்கும், பாரெங்கும் தழைக்க வேண்டும், பஞ்சசீலம் ஓங்க வேண்டும்என்று குரல் கொடுத்த, உண்மையான சமாதானத்திற்குக் குரல் கொடுத்த பண்டித ஜவஹர்லால் நேரு, உலகம் போற்றுகிற தலைவராக இருந்தார். அகிலமே அவர் என்ன சொல்கிறார் என்பதை உற்று நோக்கிக்கொண்டு இருந்த காலம், 1950 முதல் 1960 வரை.

அந்த நேரு அவர்கள், எப்படி மகேந்திர பல்லவர் நம்பிக்கையோடு புலிகேசியை அழைத்து ஏமாந்தாரோ, அதைப்போல சூ-யென்-லாய் மற்றும் சீனத்து தலைவர்களை அழைத்துக்கொண்டு வந்து, ஒரு பழம்பெருமை மிக்க நாகரீகம் கொண்டு இருக்கிற இந்திய நாடும் சீன நாடும் கொண்டு இருக்கிற உறவு வளர வேண்டும் என்ற எண்ணத்தில் அழைத்தார் .அவர் எதிர்பார்க்கவில்லை ,இமய மலையின் சரிவுகளில் சீனர்களின் படை வரும் என்று!

இந்திய இராணுவத் தளபதி திம்மையாவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லையே கிருக்ஷ்ணமேனன்?
பெரும்படையுடன் சீனர்கள் இமய மலையை நெருங்கிவிட்ட நிலையில், கொழும்புவுக்குப் போனார் நேரு. செய்தியாளர்கள் கேட்டார்கள். இந்திய எல்லைக்கு உள்ளே, சீனர்கள் நுழைந்து விட்டதாக ஒரு செய்தி வருகிறதே?’ என்று கேட்டார்கள்.

உடனே நேரு ‘I have instructed the Indian troops to throw them out’ அவர்களைத் தூக்கி வெளியே எறியும்படி , இந்தியத் துருப்புக்களுக்கு ஆணை பிறப்பித்து விட்டேன்என்றார்.

ஒரு நாட்டின் தலைவர், அந்த நாட்டைப் பாதுகாக்கவேண்டிய இடத்திலேதான் அதைச் சொன்னார். உடனே சீனர்கள் பெருந்தாக்குதலைத் தொடுத்து விட்டார்கள். அப்போது, பண்டித நேரு தழுதழுத்த குரலில் பேசிய உரையைக் கேட்டு, கோடிக்கணக்கான மக்கள் அழுதார்கள். அந்த உரையைத்தான் அண்ணா அவர்கள் வேலூர் சிறையில் கேட்டவாறு, திராவிட நாடு கோரிக்கையை நான் ஒத்தி வைக்கிறேன்.வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு வேண்டும்என்ற உணர்வோடு, தமிழ்நாட்டு வாலிபர்கள் உயிரைக்கொடுக்க முன்வரவேண்டும் என்று சொல்லி அழைப்பு விடுத்தார். புரட்சி நடிகர் தங்க வாளைத் தந்தாரே நாட்டின் பாதுகாப்பு நிதிக்காக. அப்படி அனைவரையும் உருக்கிய பேச்சு நேருவின் பேச்சு. சீனப் படையெடுப்பைத் தடுத்து இருக்கலாம் என்று விமர்சிப்பவர்கள் உண்டு. பெரிய பதவிகளில் இருக்கக்கூடிய தலைவர்கள் சொல்லும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் அவசியம்.

விதியின் வலி

அதைப்போலத்தான் கல்கி எழுதுகிறார். விதி, விதி என்பார்களே, அந்த விதி வந்து மகேந்திரபல்லவரின் நாக்கில் வந்து உட்கார்ந்து கொண்டது. விடைபெற்றுப் போக போகிறான் புலிகேசி. அப்பொழுது பேச்சுவாக்கில் மகேந்திர பல்லவர் சொல்கிறார், ‘இதற்கே இப்படி இருக்கிறீர்களே? அன்றைக்கு ஒரு ஓலையைக் கொண்டு வந்து ஒரு பையன் கொண்டு வந்து கொடுத்தான். அந்த ஓலையைப் பார்த்தபோது திகைத்துப் போய் விட்டீர்களே? அந்தத் திகைப்பை இப்பொழுது நினைக்கிறேன்என்றார்.
பொறி தட்டியது புலிகேசிக்கு. என்ன சொல்கிறீர்?’ என்றார்.
அந்த ஓலை, உண்மையான ஓலை அல்ல. பிட்சு கொடுத்த ஓலை, நாகநந்தி கொடுத்த ஓலை அல்லஎன்றார்.
சரி, உண்மையான ஓலையில் என்ன இருந்தது ?’ என்கிறார்.
அதில் எழுதியபடி வந்து இருந்தால், மூன்று நாளில் இந்த கோட்டை உங்கள் கைகளில் கிடைத்து இருக்கும். உங்கள் யானைப்படையில் ஒரு யானையின் மோதலுக்குக் கூட இந்தக் கோட்டையின் கதவுகள் ஈடுகொடுத்து இருக்காது. காஞ்சிச் சுந்தரி உங்கள் வசம் ஆகி இருப்பாள்என்றார்.
அப்படியே நெருப்பு எரிகிறது புலிகேசியின் மனதிற்குள்.
அந்த ஓலையைப் படிக்கக் கேட்டபோது நீங்கள் எப்படித் திகைத்தீர்கள்?’ என்று கூறி கலகலவென நகைத்தார் மகேந்திரன்.
'அப்படியானால் ,அந்த வஜ்ரபாகு என்ற தூதன் நீங்கள்தானா ?'
'அடியேன்தான்' என்கிறார் மகேந்திரன் .
அப்படியானால், அந்த வஜ்ரபாகு கொண்டுவந்த ஓலை...? புலிகேசி கேள்வி.
தூதனையே சிருக்ஷ்டித்தவனுக்கு ஓலையை சிருக்ஷ்டிப்பதா பெரிய காரியம்?” - இது மகேந்திரர் பதில்.
இந்தப் பல்லவன் நம்மை படுமுட்டாளாக்கிவிட்டானே? வடபெண்ணை ஆற்றங்கரையில் நமது பாசறையில் நுழைந்து, நம்மிடம் வந்து, ஒலையைக் கொடுத்துத் திட்டமிட்டு ஏமாற்றி விட்டானே? என்ற ஆத்திரம் புலிகேசிக்குத் தாங்க முடியவில்லை.
இந்த ஓலையை எழுதிக் கொடுத்த நாகநந்தி யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்கிறான் புலிகேசி.
ஊகித்துக் கொண்டேன்என்று காதோடு காதாக போய்ச் சொல்கிறார். அதாவது, இரட்டைப்பிள்ளைகளுள் ஒருவர் - அவன் சகோதரன்என்று கல்கி இதை எழுதவில்லை.
உடனே புலிகேசி கேட்கிறான். யார் என்று தெரிந்து கொண்டு, இன்னுமா சிறையில் வைத்து இருக்கிறீர்கள்?’
சக்கரவர்த்தி விடுதலை செய்யக் கோரினால் விடுவிக்கத் தடை இல்லைஎன்றார் மகேந்திரவர்மர்.
எவரிடத்திலும் எந்தக் கோரிக்கை வைக்கும் பழக்கம் வாதாபி சாளுக்கிய குலத்தாருக்குக் கிடையாதுஎன்கிறான் புலிகேசி.
கோரிக்கை வைக்காமல் வரம் கொடுக்கும் வழக்கம், பல்லவ குலத்தினருக்குக் கிடையாது’ - இது மகேந்திரவர்மன் பதில்.
இதோடு விடைபெற்றுப் போய்விட்டான் புலிகேசி.

புலிகேசியின் வஞ்சினம்

நாகநந்தி சிறைப்பட்டுக் கிடக்கிறார். பல்லவன் நம்மை ஏமாற்றிவிட்டான். இவ்வளவு முட்டாளாக்கிவிட்டான். இவனைச் சும்மா விடக்கூடாது. என்ன திமிர் இருந்தால், உங்கள் நாட்டில் சாட்டையால் அடித்தா நடனம் ஆடச் சொல்வீர்கள்? எங்கள் நாட்டின் கலைகள் என்னவென்று என் கண்ணுக்கு எதிரிலேயே சொல்கிறானே என்ற ஆத்திரம். தொண்டை மண்டலத்து மக்களைப்பற்றிப் பல்லவர் சொல்கிறார். எல்லா ஏரிகளையும் உடைத்து விட்டார்கள். குடிக்க நீர் கிடையாது. எல்லா நிலங்களையும் அழித்து விட்டார்கள் எங்கேயும் தானியம் கிடையாது. வந்த சாளுக்கிய மன்னர் படையில் பாதிப்பேர், பட்டினியால் இறந்து விட்டார்கள் என்று அந்த கோபம் வேறு.

இந்த ஆத்திரத்தில் புலிகேசி உத்தரவிடுகின்றான். நான் ஒரு பெரும்படையை அமைத்துக்கொண்டு முன்னால் போய் விடுகிறேன். நீங்கள் 10 பிரிவுகளாகப் பிரிந்து செல்லுங்கள். தமிழகக் கிராமங்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்துங்கள்; கண்ணில் கிடைக்கிற பெண்களை எல்லாம் சிறைபிடியுங்கள்; இளைஞர்களை வெட்டிக் கொல்லுங்கள்; வயதானவர்களின் கை, கால்களை வெட்டுங்கள்என்று உத்தரவு போட்டுவிட்டு. அவன் வடக்கே போய்விட்டான்.

அவன் கட்டளைக்கு இணங்க, பல்லவ நாட்டில் பல பகுதிகளிலே தீ வைக்கப்படுகிறது. பார்க்கிற இடங்களில் எல்லாம் தமிழர்களை வெட்டுகிறார்கள். இந்தக் கட்டத்தில், கோட்டைக்கு உள்ளே பத்திரமாக இருக்கிற ஆயனரும், சிவகாமியும், அஜெந்தா வண்ண ஓவியத்தின் ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று பைத்தியமாக இருப்பதனால், கோட்டைக்கு வெளியே சென்று புலிகேசியிடமே சென்று ரகசியத்தைக் கேட்கலாம் என்று நினைக்கிறார்கள். ஏன் என்றால், வெளியே நடப்பது அவர்களுக்குத் தெரியாது.

சிக்கினாள் சிவகாமி

இந்தக் காப்பியத்தில் வருகிற ஒரு அருமையாக கதாபாத்திரம் கண்ணபிரான். சக்கரவர்த்திக்கும், இளவரசருக்கும் ரத சாரதி. அவன் மனைவி கமலி. கமலியின் தந்தை அசுவபாலர். கோட்டைக்கு உள்ளே இருந்து வெளியே செல்கின்ற ரகசியப் பாதை அசுவபாலருக்குத் தெரியும். பல்லவச் சக்கரவர்த்தியும், அசுவபாலரும் ரகசியமாகப் பேசிக்கொண்டு இருக்கும்போது, ரகசியப்பாதையை, கமலி தெரிந்துகொள்கிறாள். கமலிக்கு சிவகாமி உயிர்த்தோழி. சிவகாமியின் தந்தை இவளிடம் சொல்வதைப் பார்த்து. நீங்கள் வெளியே போக வேண்டும் என்றால், ரகசிய வழி இருக்கிறதுஎன்று சொல்லி, அதன்வழியாக அனுப்பி வைக்கிறாள்.
சுரங்கப்பாதையை விட்டு வெளியே வரும்போது எதிரே படை வருகிறது. பல்லவ நாட்டு படைகள் என்று நினைத்துக்கொண்டு போனால், அங்கு வராகக் கொடி பிடித்த சாளுக்கிய வீரர்கள் வருகிறார்கள். மகாசிற்பி ஆயனரும் சிவகாமியும் பிடிபட்டார்கள். கொடூரமான காட்சி.

தாங்கள் இன்னார் என்று சொன்னவுடன், அங்கு உள்ளவர்கள் நினைத்தார்கள், ‘இவள்தான் சக்கரவர்த்திக்கு முன்னால் நடனம் ஆடியவள் - இவன் மகா சிற்பி. சிற்பிகளை எல்லாம் ஒரு காலையும், கையையும் வெட்டச் சொல்லி இருக்கிறார்கள். நீங்களோ மகாசிற்பி. உங்களது இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் வெட்டிக் கொல்ல வேண்டும்என்று கொண்டு போகிறார்கள். மூர்ச்சை அடைந்து கீழே விழுகிறாள் சிவகாமி.

இந்தச் சந்தர்ப்பத்தில், ‘நாகநந்தியை வெளியே அனுப்பி விடுவோம், புலிகேசி கேட்டானே என்று, நாகநந்தியையும் வெளியே அனுப்பி விட்டார் மகேந்திரவர்மர்.

பிட்சுவின் காதல்

இப்பொழுதுதான் அந்தக் காட்சி. சிவகாமி கைது செய்யப்பட்டு, ஆயனரை கொலைசெய்யப்போகிற அந்த இடத்திற்கு, புலிகேசியே வந்து விடுகிறான்.
குழப்பமாக இருக்கிறதா? ஆம். புலிகேசியாகவே நாகநந்தி மாறுகிறான். என்னவென்றால், மகேந்திர பல்லவர் இப்படி ஒரு கட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து, புலிகேசியின் கிரீடத்தைப்போல, அவன் அணிந்து இருக்கக்கூடிய ஆபரணங்களைப் போல, காஞ்சிப் பொற்கொல்லர்களை வைத்து தயார் செய்து, அது இந்த பிட்சுவின் கைகளில் கிடைக்கும்படியாகச் செய்து இருக்கிறார். அதை அணிந்து கொண்டு வந்த நாகநந்தி, படை வீரர்களுக்கு உத்தரவிடுகிறான். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். சிவகாமியை பத்திரமாக அனுப்ப வேண்டும் என்று சொல்லி, ஆயனரையும் காப்பாற்றுகிறான்.

இந்தப் பிட்சுவுக்கு சிவகாமியின் மேல் எல்லையற்ற காதல். கடைசியாக ஒன்று கேட்கிறான். இங்கே இருக்கக்கூடிய தமிழ்ப் பெண்களை எல்லாம் விடுதலை செய்து அனுப்பி விடுகிறோம். நீ வாதாபிக்கு எங்களுடன் வரவேண்டும். இந்தப் பெண்களின் துன்பத்தைப் போக்குவதற்காக - கைக்குழந்தைகனை வீட்டில் விட்டுவிட்டு வந்த பெண்கள் - தாய் தந்தையரை விட்டுவந்த பெண்கள் கணவனை விட்டுப் பிரிந்த பெண்களைக் காக்க வேண்டும் என்று கருதி, சிவகாமி அவன் சொன்னதற்கு உடன்படுகிறாள். அந்தப் படைகளோடு வாதாபிக்குக் கொண்டு செல்லப்படுகிறாள்.

ஓலை வந்தது

கொள்ளிடத்தில் நடந்த சண்டையில் பாண்டியனை வீழ்த்தி வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு திருவெண்காட்டுக்கு வருகிறார்கள் மாமல்லரும், பரஞ்சோதியும். அங்குதான் வைத்தியர் மகள் உமையாள் இருக்கிறாள். திருவெண்காட்டு நங்கை. பரங்சோதியாரின் வருங்கால மனைவி. பின்னாளில் பெரிய புராணத்தில் வருகிறது அல்லவா? ‘சீராளா வாஎன்று அழைத்தார்களே சிறுதொண்டரும், அவர்தம் மனைவியும். அந்தச் சிறுதொண்டர்தானே பரஞ்சோதி! அந்தத் திருவெண்காட்டுக்கே வருகிறார்கள். குதூகலம் கொண்டாடுகிறது.

மாமல்லருக்குத் திருமணம் நடக்கிறபோதே ,பரஞ்சோதிக்கும் திருமணம் முடித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .பாண்டியனைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த மகிழ்ச்சிப்பெருக்கோடு திருவெண் காட்டிலிருந்து காஞ்சிக்குப் புறப்படுகிறார்கள் .வராக நதியைத் தாண்டியவுடன் எதிரே குதிரை வீரர்கள் இரண்டு பேர் வந்து ஓலைகளைத் தருகிறார்கள் .ஒரு ஓலை மாமல்லருக்கு -சக்கரவர்த்தியின் ஓலை.
அதில் அருமைப்புதல்வன் வீரமாமல்லருக்கு கர்வ பங்க மடைந்த தந்தை மகேந்திரவர்மன் கண்ணீரடனும் துயரத்துடனும் எழுதிக் கொண்டது. குழந்தாய்! என்னுடைய சாணக்கியத் தந்திரமெல்லாம் கடைசியில் பயனற்றுப் போய்விட்டன. உன் நேர்மையான யோசனையைக் கேட்காமல் போனதற்காக அளவற்ற துயரமடைந்துள்ளேன். மகனே! அந்தப் பாதகப் புலிகேசி என்னை வஞ்சித்துவிட்டான். துவேஷம் செய்துவிட்டான். தொண்டை மண்டலத்துக் கிராமங்களையும், பட்டணங்களையும்கொளுத்தவும், சிற்பங்களை எல்லாம் உடைக்கவும் குடிகளை இம்சிக்கவும் அந்த மூர்க்க ராட்சஷன் கட்டளையிட்டிருக்கின்றானாம். ஐயோ! - குமாரா எப்படி உன்னிடம் சொல்வேன் - பல்லவ ராஜ்யத்தின் சிறந்த கலைச் செல்வம் பறிபோய்விட்டதோ என்றும் ஐயுறுகிறேன் - மூர்க்க சாளுக்கர் கொடுமையிலிருந்து நமது குடிகளைக் காக்கக் கோட்டையினுள்ள சைன்யங்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறேன். காஞ்சிக் கோட்டைக்கு நான் திரும்பி வருவேனா என்பது சந்தேகம். உன்னை உயிரோடு பார்ப்பேன் என்பதும் நிச்சயமில்லை. போர்க்களத்தில் எனக்கு வீரமரணம் கிடைத்தால் பெறும் பேராகும். பல்லவ வம்சத்துக்கு இனிமேல் உன்னைத் தவிர வேறு கதியில்லை.
பரஞ்சோதிக்கு ஒரு கடிதம்: நீங்கள் தவறே செய்தது கிடையாதா? என்று பரஞ்சோதி நீ அடிக்கடி கேட்பாய். நானும் அகம்பாவத்துடன் கிடையாது என்று சொல்லி வந்தேன். இப்போது மகா பயங்கரமான தவறு செய்துவிட்டேன். என் மகன் மாமல்லனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இதோ போர்க்களத்திற்குப் போய்க்கொண்டு இருக்கிறேன்என்று எழுதி இருக்கிறார்.

இந்த ஓலைகளைப் படிக்கிறார்கள். அந்த ஓலைகளைக் கொண்டுவந்த வீரர்கள் நின்றனர். அவர்களைத் தாங்கி வந்த குதிரைகள் நின்றன. மாமல்லருடன் வந்த வீரர்கள் நின்றனர். அவர்களுக்குத் துணையாக வந்துகொண்டு இருந்த ஆயிரக்கணக்கான படை வீரர்கள் நின்றனர். கிளைகளும் இலைகளும் அசையாமல் நின்றன. சற்றுநேரம் காற்றும் அசையாமல் நின்றதுஇந்த அத்தியாத்துக்கு காற்றும் நின்றது என்று தலைப்பிட்டு உள்ளார் கல்கி. இந்தத் தொடரின், ஒவ்வொரு தலைப்புமே அருமையான தலைப்புகள்!

அதன்பின்பு அங்கிருந்து புறப்பட்டு வருகிறார்கள். அந்தக் கொடுமைகளைச் செய்கிற சாளுக்கிய வீரர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிச் செல்கிறார்கள். போகிற இடங்களில் எல்லாம் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

மணிமங்கலத்தில் மகேந்திரவர்மச் சக்கரவர்த்தியே போர்புரிகிறார். சாளுக்கியப் படைக்டுப் புலிகேசி (புலிகேசி வடிவத்தில் இருக்கக்கூடிய நாகநந்தி) மன்னனே வந்து போர் புரிகிறான். அதில் அவன் தோற்றுஓடும்போது போகிற வேகத்தில் விஷக்கத்தியை வீசிவிட்டுப் போகிறான். அது மகேந்திரவர்மன் மீது விழுந்து கீழே சாய்கிறார் மகேந்திரவர்மர். மாமல்லரும் பரஞ்சோதியும் போரில் பங்கேற்கின்றனர் இனி தொடர்ந்து நெடுந்தூரத்திற்குப் போவது போர்த் தந்திரம் அல்ல. சக்கரவர்த்தி மரண காயம்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வந்த நிலையில், நரசிம்மவர்மனும் பரஞ்சோதியும் திரும்பி வருகிறார்கள்.
மகேந்திரவர்மர் மரணத் தருவாயில் மாமல்லரிடம் சொல்லிகிறார்.
சிவகாமியை வாதாபியிலிருந்து மீட்காவிடில் பல்லவகுலத்துக்கு தீரா அவமானம் என்பதால் பெரும்படை திரட்டிப் போக பல ஆண்டு ஆயத்தமாக வேண்டும், எனவே மாறுவேடத்தில் சென்று மீட்டுவருமாறு மாமல்லரை, பரஞ்சோதியை, சத்ருக்கனை அனுப்பி வைக்கிறார் மேகேந்திரவர்மர்.

வாதாபியில் சிவகாமியை மீட்டுவர மாமல்லர் முயன்றபோதுஅவள் தான் செய்த சபதத்தை நிறைவேற்றாமல் வரமுடியாது என மறுத்து விடுகிறாள்.

மகேந்திரவர்மர் மரணப்படுக்கையில் பரஞ்சோதியை ,அமைச்சர்களை அழைத்துச் சொல்கிறார்அறுநூறு வருட வீரப்புகழுக்கு என் காலத்தில் பங்கம் நேர்ந்துவிட்டது. பல்லவ சைன்யம் படையெடுத்துச் சென்று சாளுக்கியரை வென்று புலிகேசியைக் கொன்று வாதாபிநகரை அழித்து, தீ வைத்து எரிக்க வேண்டும். பல்லவ ஐயஸ்தம்பம் வானளாவ எழ வேண்டும்அனைவரும் அதனை நிறைவேற்றும் வீரராகி உறுதியளிக்கின்றனர்.

நரசிம்மர் திருமணம்

பின்னர் மாமல்லரைத் தனியாக அழைத்து மகேந்திரவர்மர் கூறுகிறார். நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிஇராஜகுலதர்மம் என்பது தனியானது. இராஜ குலத்தில் பிறந்தவர்கள் தங்கள் சொந்த சுகதுக்கங்களை மறந்துவிட வேண்டும். சிவகாமியை நீ மணப்பது இனி சாத்தியமில்லை - தெற்கே ஒரு சத்துருவை வைத்துக்கொண்டு வடக்கே படையெடுக்க முடியுமா? நீ பாண்டிய இராஜகுமாரியை மணந்துகொள். அதனால் பல்லவராஜ்யத்துக்கு பெரும்பலம் ஏற்படும். வாதாபி படையெடுப்புக்கு பிரம்மாண்டமான ஆயத்தங்கள் செய்ய வேண்டும்” - என உருக்கமாகக் கேட்டார். அருகில் மகாராணி புவனமகாதேவி கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கமாமல்லர் பாண்டிய ராஜகுமாரியை மணக்கச் சம்மதிக்கிறார்.

மகேந்திரபல்லவர் மறைகிறார். பாண்டிய அரசகுமாரியை நரசிம்ம வர்மன் மணக்கிறார். குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்பது ஆண்டுகள் கடந்தன...
இக்காவியத்தில் தமிழகத்தின் வரலாற்றுச் சம்பவங்கள் அற்புதமாகப் பின்னப்பட்டிருக்கினறன. பாண்டிய மன்னன் நெடுமாறன் சமணமதத்திலிருந்து - ஞானசம்பந்தப் பெருமானால் சைவ சமயத்திற்கு மாறக் காரணமாயிருந்த அவன் பட்டத்தரசி சோழன் செம்பிய வளவன் மகள் மங்கையர்க்கரசி - இருவரும் காஞ்சியில் சந்திப்பதும் காதல் அரும்புவதும் - நாவலின் கதை ஓட்டத்தோடு அழகாகச் சொல்லப்படுகிறது.

நாகநந்தியின் தியாகம்

வாதாபியில் நடப்பது என்ன தெரியுமா? சிவகாமிக்கு எந்தக் கேடும் செய்யக்கூடாது என்று நாகநந்தி, புலிகேசியிடம் உத்தரவு வாங்கி விட்டான். சிவகாமியை யாரும் தவறான நோக்கத்துடன் நெருங்கக்கூடாது என்று சொல்லி விட்டான். ஏனென்றால் இரட்டைப் பிள்ளைகளுள், முதலில் பிறந்தவன் நாகநந்தி. அவனுக்குத்தான் அரசு உரிமை. ஆனால், புலிகேசிக்காக அவன் எல்லாத் தியாகமும் செய்து இருக்கிறான்.
பாரசீகச் சக்கரவர்த்தியின் தூதுவர்கள் புலிகேசியின் அரண்மனைக்கு வந்து இருக்கிறார்கள். அவர்கள் முன்னாள் நடனம் ஆடுவதற்கு சேவகர்களை அழைத்து சிவகாமியை அழைத்து வர அனுப்புகிறான் புலிகேசி. அவளோ, ‘இந்தப் பாதகப் புலிகேசியின் சபையில் ஆடமாட்டேன் என்கிறாள். அப்படியா, நடக்கிறதைப் பார்என்கிறான் புலிகேசி.

வாதாபி வீதியில் வதைபட்ட தமிழர்

மறுநாள், வாதாபி நகர வீதிகளை காண்பிப்பதற்குப் பல்லக்கில் அழைத்துக்கொண்டு போகிறார்கள். அப்பொழுது அவள் கண்களுக்கு அந்தக் கோரக்காட்சி தெரிகிறது. பெண்களின் கைகள் கட்டப்பட்டு, நாற்சந்தி மூலையில் சவுக்கால் அடிக்கப்படுகிறார்கள். எல்லாம் தமிழ்ப் பெண்கள். அவர்கள் பேசுவது தமிழ். ஆண்களும் அப்படிப்பட்ட சித்ரவதைகளுக்கு ஆளாகிறார்கள். இதைப் பார்த்து நெஞ்சு துடிதுடிக்க வருகிறபோது, ஒருவன் சொல்கிறான், ‘இதை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று சொன்னால், அது உங்களிடம்தான் இருக்கிறது.
நீங்கள் நடனம் ஆடினால், சவுக்கால் அடிப்பதை நிறுத்தலாம். எவ்வளவு நேரம் ஆடுகிறீர்களோ, அப்பொழுது இவர்களைஅடிக்கமாட்டோம்என்கிறார்.
அதற்கு அவள், ‘என்னால் முடியாதுஎன்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள். ஆனாலும், மனம் பொறுக்கவில்லை. மறுநாளும் போகிறாள். தமிழ்ப்பெண்கள் கொடுமைப்படுத் தப்படுவதை மீண்டும் போய்ப் பார்க்கிறாள். அவள் மனம் கேட்கவில்லை. நடனம் ஆடத் தொடங்குகிறாள். அந்தி சாயும் வரை ஆடுகிறாள். ஆடி முடிந்தவுடன், அவள் தங்க வைக்கப்பட்டு இருக்கிற கட்டடத்திற்கு வருகிறாள்.
இந்த வேளையில், ஒரு நாள் இரவில், ஆறு பேர் வருகிறார்கள் வாதாபிக்கு. நரசிம்ம பல்லவர் - பரஞ்சோதி - ஒற்றர் படைத் தலைவன் சத்ருகனன் - குண்டோதரன் - அசுவபாலர் - கண்ணபிரான் இவர்கள்தான் வருகிறார்கள். சிவகாமியைச் சந்திக்கிறார்கள். ஆனால், அதற்குச் சற்றுமுன்பு, இப்படி நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடிப்பதைப் பார்க்கச் சகிக்காமல், நடனம் ஆடுவதை வந்து பார்த்து விடுகிறான் நாகநந்தி.

நாகநந்திக்கு எப்படிக் காதல் வந்தது?
அஜெந்தா வண்ண ஓவியங்களில் அழகான பெண் நடனமாடுவதைப் போன்று ஒரு சித்திரம் இருக்கிறது. அது அவனது இதயத்தைக் கவர்ந்து விடுகிறது. அந்தச் சித்திரத்தில் இருக்கிற தோற்றத்துடன்தான் அவன் காஞ்சி ஆயனர் வீட்டில் பார்க்கிறார் சிவகாமியை. அதனால்தான் அவள் மேல் காதல்.

பெண்களை அடிப்பதை நிறுத்துவதற்காக நடனம் ஆடினாள் அல்லவா? கொதித்துப்போகிறான். இப்படியா கொடுமை செய்கிறான் புலிகேசி? உன்னை விடுவித்து அனுப்புகிறேன். பல்லக்கைக் கொண்டு வருகிறேன். நீ போய்விடுஎன்று சொல்கிறான். அப்பொழுது அவன் எதுவும் திட்டமிடவில்லை. நீ போய்விடுஎன்கிறான். அதுவே, சூழ்ச்சி என்கிறார் கல்கி. நாம் படிக்கும்போது நினைப்போம், நாகநந்தி அனுப்பத்தான் திட்டமிடுகிறாரோ என்று. ஆனால் கடைசியில் முடிக்கும்போது நாகநந்தியின் சூழ்ச்சி பலித்ததுஎன்று முடிக்கிறார் வரியை.

சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் என்று இந்த நாவலின் தலைப்புக்கான பெயரை, இந்த 50 ஆவது அத்தியாயத்தில், மூன்றாவது பாகமானபிச்சுவின் காதல் என்ற பாகத்தில் கல்கி வைக்கிறார்.
அப்போது சிவகாமி சொல்கிறாள்: அடிகளே நான் வாதாபியைவிட்டு இப்போது கிளம்ப மாட்டேன். எப்போது புறப்படுவேன் தெரியுமா? நீங்கள் பயங்கொள்ளி என்று அவதூறு கூறிய வீர மாமல்லர், ஒரு நாள் இந்த வாதாபி நகர் மீது படை எடுத்து வருவார். நரிக்கூட்டத்தின் மீது சிங்கம் பாய்வதைப்போல, சாளுக்கிய சைன்யக்களை சின்னாபின்னம் செய்வார். நாற்சந்தி முனையிலே எங்களை நடனம் ஆடச்செய்த மாபாதக புலிகேசியை எமலோகம் அனுப்புவார். தமிழ்ப் பெண்களையும் ஆடவர்களையும் எந்த வீதிககளில் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களோ, அந்த வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை எந்த நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடித்தார்களோ, அங்கே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக் கிடக்கும். வாதாபி நகரத்தின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எரிந்து சாம்பல் ஆகும். சாளுக்கியத் தலைநகர் சுடுகாடாக ஆகும். இத்தனைக்குப் பிறகு, போரில் வெற்றி பெற்ற வெற்றி மாலையோடு, வீர மாமல்லர் வருவார். என்னைக் கரம் பற்றி அழைத்துச் செல்ல வருவார். அப்போதுதான் நான் புறப்படுவேன். நீர் அனுப்பிப் போக மாட்டேன்.
பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போக மாட்டேன். யானை மீது ஏற்றி அனுப்பினாலும் போக மாட்டேன்
இதுதான் சிவகாமியின் சபதம்.
இது நடந்ததற்குப்பிறகு, மாமல்லரே வருகிறார். சிவகாமியைப் பார்க்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்துப்பேச நேரம் இல்லை. விவரிக்க நேரம் இல்லை. அழைக்கிறார். மறுக்கிறாள்.

நான் வரமாட்டேன். நான் சபதம் செய்து இருக்கிறேன். தமிழ்ப் பெண்களையும், ஆடவர்களையும் எந்த வீதிகளில் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களோ, அந்த வீதிகளில் இரத்த ஆறு ஓட வேண்டும். எந்த நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடித்தார்களோ, அங்கே வாதாபி மக்களின் பிணங்கள் நாதியற்றுக் கிடக்க வேண்டும். வாதாபி நகரத்தின் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாக ஆக்கப்பட வேண்டும். இந்த வாதாபி தீக்கு இரையாக ஆக்கப்பட வேண்டும்என்கிறாள்.

ஒருவேளை கல்கி அவர்கள், இந்த நாள் வரை 1983 வரை 87 வரை உயிரோடு இருந்திருந்தால், இதுமாதிரி எங்கெல்லாம் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்ததோ அதை இதைவிட என் போன்றவன் எழுதவும் முடியாது, என் போன்றவன் பேசவும் முடியாது, அப்படி உணர்ச்சி பொங்க எழுதியிருப்பார்கள்.

சிவாமியின் சபதத்தைப் படிக்கும்போதே இரத்தத்தில் சூடு பறக்கிறதே! தமிழ்ப் பெண்களையும், ஆடவர்களையும் எந்த வீதிகளில் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களோ அந்த வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை எந்த நாற்சந்தி முனையிலே சவுக்கால் அடித்தார்களோ, அங்கே வாதாபி பிணங்கள் நாதியற்றுக் கிடக்கும். வாதாபி நகரத்தின் மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாக ஆகும். வீர மாமல்லவர் இந்த வாதாபி மீது படை எடுத்து வருவார். நரிக்கூட்டத்தின் மீது சிங்கம் பாய்வதைப்போல, சாளுக்கியப் படைகள் சின்னாபின்னம் செய்வார் என்று சபதம் செய்து இருக்கிறேன். எனவே, நான் வர மாட்டேன்என்கிறாள்.
சபதத்தை நிறைவேற்றுவோம். இப்போது என்னுடன் வந்துவிடுஎன்கிறார் மாமல்லர்.
அந்த நாட்டின் கோட்டைக்கு உள்ளே வந்து இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம். அந்த நிலையில் அவர்கள் அழைக்கிறார்கள், இவள் மறுக்கிறாள். என்ன அருமையாகக் கல்கி அதை வரவேற்கிறார்! அப்படித் தடுக்கும்போது, ஒருவருக்கு ஒருவர் கோபம் வருகிறது.
அகம்பாவம் உனக்கு போகவில்லை. அகம்பாவத்தோடு பேசுகிறாய்என்கிறார்.
சேர ராஜகுமாரிக்கும், பாண்டியன் மகளுக்கும் மட்டும்தான் அகம்பாவம் இருக்குமா? நான் செந்தமிழ் நாட்டு வீரப்பெண் குலத்தில் பிறந்தவள். வீரத் தமிழ்க் குலப் பெண்ணின் இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது - பத்தினித் தெய்வம் கண்ணகி வாழ்ந்த நாட்டில் நானும் பிறந்தேன். எனக்கு ஏன் அகம்பாவம் இருக்கக்கூடாது பிரபுஎன்கிறாள்.
அதற்குள் பிட்சு வருகிறார் என்ற செய்தியை, ஒற்றர் தலைவர் சத்ருகனன் தகவல் சொல்ல, அந்த இடத்தில் இருந்து போய்விடுகிறார்கள்.
அதற்குப்பிறகு நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. அதற்க உள்ளே போக நேரமில்லை.

கடைசி பாகம் சிதைந்த கனவு

ஒன்பது வருடங்களுக்குபின் பல்லவ சைன்யம் வாதாபியில் போருக்குப் புறப்படுகிறது. மிகப்பெரிய படை. இலங்கையில் அரசு உரிமை பெற வேண்டிய அரசகுமாரர், யானைப் படைக்குப் பயிற்சி கொடுத்த மானவர்மரும் வந்து இருக்கிறார். இந்தப் படை புறப்படுகிற காட்சி இருக்கிறது அல்லவா, அற்புதக் காட்சி, அந்த ஏகாம்பரநாதர் - கைலாசநாதர் கோவிலில் இருந்து அமாவாசை அன்று போருக்குப் புறப்படுகிற நேரத்தில், வாழ்த்துப் பெற்று புறப்பட்டு படை எடுத்துப் போகிறார் நரசிம்மர்.

சிவகாமியின் சபதத்தை நிறைவேற்றி, பல்லவப் பேரரசின் புகழை நிறைவேற்றப் படை செல்கிறது. மகேந்திரரின் ராஜதந்திரம், மாமல்லருக்கும் வந்துவிட்டது. புலிகேசிக்குத் தகவல்கள் சரியாகக் கிடைக்கவில்லை. பிட்சுவே அதைத் தடுக்கிறான். நர்மதையின் பக்கத்திலே பெரும்படை காத்துக்கிடக்கிறது. வேங்கியில் படையின் பெரும் பகுதி இருக்கிறது. இந்தக் கட்டத்தில், வாதாபியை நெருங்குகிறது பல்லவ நாட்டுப் படை. வாதாபிக்கு மூன்று காதத்திற்கு வடக்கே பெரும்போர் நடக்கிறது. கோட்டை முற்றுகை இடப்பட்டது. இன்னொரு பல்லவப் படையுடன் சென்று அதை வெற்றி பெறுகிறார்கள்.

மந்திர ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக் கட்டம் ரொம்ப அருமையாக இருக்கும். சிவகாமியிடம், வாதாபியின் கோட்டைத் தலைவன் பீமசேனன், ‘வாதாபி மக்கள் எல்லாம் அழிந்துபோய் விடுவார்கள். நீ சொன்னால் நகரத்தை அழிக்காமல் இருப்பார்கள். எனவே, நீ கடிதம் அனுப்புஎன்கிறான். சிவகாமியின் மனம் மாறி விட்டது. அத்தனை பேரையும் கொன்று குவித்து இரத்த வெள்ளத்தைப் பார்க்கும் எண்ணம் இல்லை.
ஏன் இந்த யுத்தம்? எத்தனை அப்பாவி மக்கள் சாவார்கள்? இதற்கு நம் சபதம் காரணமாக இருக்க வேண்டுமா? எனவே யுத்தம் வேண்டாம். ஏதோ அன்றைக்கு இருந்த உணர்ச்சியில் சபதம் செய்தோம். இவ்வளவு அப்பாவி மக்கள் சாக வேண்டுமா? என்று நினைத்து, சக்கரவர்த்திக்கும், படைத்தலைவர் தலைமைத் தளபதி பரஞ்சோதிக்கும் கடிதம் எழுதி அனுப்புகிறாள். கடிதம் இவர்கள் கைக்கு வந்து விடுகிறது.

மாமல்லரின் கோபம்

ஒரு கடிதம், பீமசேனன் தூது அனுப்பி இருக்கிறான். நாங்கள் சரண் அடைந்து விடுகிறோம். வாதாபியில் இருக்கிற செல்வங்களை எல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் சரண் அடைந்து விடுகிறோம்என்று கடிதம் வந்து இருக்கிறது.

மூன்று நாளாக ஏன் இன்னும் கோட்டையை முற்றுகை போட்டுக்கொண்டு இருக்கிறாய்? அவன் சமாதானத் தூது அனுப்புவதற்குள் வாதாபியை அழிக்க வேண்டும் என்று நரசிம்ம பல்லவர் நினைக்கும்போது, சமாதானத் தூது வந்து விடுகிறது. எனவே, நாமாக ஏன் இவ்வளவு பேரை அழிக்க வேண்டும்? என்று பரஞ்சோதி சொன்னவுடன், மாமல்லருக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

கோபத்தில் கொதிக்கிறார் மாமல்லர். என்ன பரஞ்சோதி? புலிகேசி நம் நாட்டில் செய்த அக்கிரமங்களை எல்லாம் மறந்து விட்டீர்காள? தமிழர்களை எப்படி எல்லாம் கொடுமை செய்தார்கள்இந்த நகரத்தை எரித்துச் சாம்பலாக்க வேண்டிய அவசியம் உமக்கு தெரியாதா? என்று சொல்கிறார்.

இன்னொரு கடிதமும் இருக்கிறது. அது சிவகாமி எழுதிய கடிதம். யுத்தம் வேண்டாம் ஏதோ ஒரு ஆத்திரத்தில் சபதம் செய்து விட்டேன்என்று அவள் எழுதி இருந்ததைப் பார்த்தபோது, கனல் பறக்கிறது, எரிமலை வெடிக்கிறது.

நரசிம்ம பல்லவர் சொல்கிறார்: என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள் இந்தச் சிற்பி மகள்? பல்லவ சாம்ராஜ்யமே இவளுக்காக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டாளா? பல்லவ நாட்டு பிரஜைகளும், பல்லவ சக்கரவர்த்திகளும் இவளுக்குத் தொண்டு செய்யும் அடிமைகள் என்று எண்ணிக்கொண்டாளா? ஒன்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டு நான் படை திரட்டி வந்தது இந்த மூடச் சிற்பி மகளின் சபதத்தை நிறைவேற்றவா? இல்லை ஒருகாலும் இல்லை.

மரணத்தருவாயில் மகேந்திர பல்லவச் சக்கரவர்த்தி, வாதாபியைத் தீக்கு இரையாக்கி வெற்றித் தூணை நிறுவி வா என்று எனக்குப் பிறப்பித்த கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே நான் வந்தேன். வீர பல்லவக் குலத்திற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காக வந்தேன். 18 வயதிலேயே மகாமல்லன் என்று பெயர்பெற்ற நரசிம்மனை, இந்த நானிலம் கைகொட்டிச் சிரிக்கக் கூடாது என்பதற்காக வந்தேன்.

நான் செய்த தவறுகள்

சேனாதிபதி நான் வாழ்க்கையில் இரண்டு தவறுகள் செய்தேன்.
ஒன்று, சிற்பி மகளை சிம்மாசனத்தில் ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன். இன்னொன்று, நாடி பிடிக்கிற வைத்தியர் மகனை நாடு பிடிக்கும் சேனாதிபதி ஆக்கினேன். இந்த நிமிடத்தில் இருந்து நீ சேனாதிபதி பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம்-மானவர்மரே நீர் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்என்கிறார்.

எரிமலை பனிமலையானது

அப்படியே பதறிப்போய் பரஞ்சோதி சொல்கிறார்: நாம் எடுத்த சத்தியம், பல்லவ நாட்டை வென்று காஞ்சியை அழித்து, அவர் எழுப்பி இருக்கிற வெற்றித்தூணை அழித்து வெற்றி பெறுவோம் என்று சபதம் எடுத்து இருக்கிறோம். எனவே அது முடிகிறவரை இந்த சேனாதிபதி பதவியை எனக்குத் தாருங்கள்என்றார்.

அதைத்தானே நான் விரும்பினேன் என்றார் பல்லவச் சக்கரவர்த்தி. இவ்வளவு கோபபப்பட்ட ஒரு எரிமலை அடுத்து பனிமலை ஆகிறது. இந்த எரிமலைக்கு உள்ளே ஒரு காதல் அப்படியே இருக்கிறது. அதைத்தான் கல்கி எழுதுகிறார்.

அதைத்தானே நான் விரும்புகிறேன். சேனாதிபதி - போரை நடத்துங்கள். என்ன ஏற்பாடு செய்து இருக்கிறீர்கள் சேனாதிபதி எனக் கேட்கிறார்!
முக்கியமான பொறுப்பை மானவர்மரிடம் தந்து இருக்கிறேன். அவர் யானைப்படையோடு கோட்டையை உடைத்து உள்ளே வருவார். 30 ஆண்டுகளாக புலிகேசி பெரும் செல்வங்களை வைர வைடூரியங்களைப் பாதுகாப்பாக வைத்து இருக்கிறான். அந்தச் செல்வங்களை எல்லாம் பாதுகாத்துக் கொண்டு போகிற பொறுப்பை மானவர்மரிடம் ஒப்படைத்து இருக்கிறேன் என்கிறார் பரஞ்சோதி.

எரிமலையாக வெடித்த நரசிம்ம பல்லவர், குரல் கம்மக் கேட்கிறார், ‘சேனாதிபதி, இந்தச் செல்வங்களை எல்லாம் பாதுகாக்க ஏற்பாடு செய்து விட்டீர்களே, வாதாபிக்கு உள்ளே காப்பாற்றப்பட வேண்டிய இன்னொரு செல்வம் ஏதும் இல்லையா?’ என்கிறார். நெஞ்சக் கனலாக உள்ளே தகிக்கும் சிவகாமியைத்தான் குறிப்பிடுகிறார் பல்லவ வேந்தர்.
அதற்கு பரஞ்சோதி, ‘அடியேனே, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்என்கிறார்.

அதன்பிறகு கோட்டைக்குள் போகிறார்கள். நாகநந்தி உள்ளே வந்து சிவகாமியை அழைத்துக்கொண்டு போகத் துடிக்கிறான் அந்த இடத்திலே இருக்கிற கபாலிகனிடம், இப்பொழுது உள்ளே ஒருவன் வருவான். அவன்தான் மாமல்லன். அவனைக் குத்திக்கொன்றுவிடுஎன்ற சொல்கிறான்.

ஆனால் அங்கு மாமல்லன் வரவில்லை. ரதசாரதி கண்ணபிரான் உள்ளே வருகிறான். கண்ணபிரான் குத்துப்பட்டுச் சாகிறான். அலறித் துடித்து மூர்ச்சை அடைகிறாள் சிவகாமி. புத்தபிட்சு அவளைத் தூக்கிகொண்டு சுரங்கத்தின் வழியாக வெளியேறுகிறான்.

ஏற்கனவே வாதாபி மக்கள் சிவகாமியைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். நாகநந்தி புலிகேசியாகவே வந்து, ‘நானே சண்டையை நடத்துகிறேன் என்றான். இந்த கட்டத்தில், அந்தக் குகையில் சிவகாமியைத் தூக்கிக்கொண்டு செல்கிறபோது, எதிரே சத்ருகனனும், பரஞ்சோதியும் வர, சிக்கிகொண்டான். நாகநந்தியைக் கைது செய்யப்போகிற நேரத்தில் அந்த விஷக்கத்தியை சிவகாமியை நோக்கி வீசப் பார்க்கிறான். தனக்குக் கிடைக்காத சிவகாமி, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று விஷக்கத்தியை வீசப்பார்க்கிறான்.

பரஞ்சோதி வாளால் ஓங்கி வெட்டுகிறார். நாகநந்தியின் கை துண்டாக போய் விழுகிறது. அஜெந்தா வண்ண ஓவிய ரகசியத்தைச் சொல் என்கிறான். இதற்குபிறகு கொல்ல மனம் இல்லை என்கிறான். போய்விட்டான். இவன்தான் பார்த்திபன் கனவில் நீலகேசியாக வருகிறான்.

எங்கே போகிறாள்?

மாமல்லரைப் பார்க்க சிவகாமியை அழைத்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. எங்கே போகப் போகிறாள்? அஜெந்தா வண்ண ரகசியத்தைப் பார்க்கப் போகிறாளா? இல்லை ஊருக்குப் போகப் போகிறாளா? என்று கேளுங்கள் அவளிடம்என்கிறார் மன்னர்.
மாமல்லர் தன் வாளால் என்னை எமலோகம் அனுப்பட்டும்என்கிறாள் சிவகாமி. மாமல்லருக்குத் திருமணம் ஆனது அவளுக்குத் தெரியாது. சிவகாமியையும் அழைத்துக் கொண்டு எல்லோரும் பல்லவ நாட்டுக்கு வருகிறார்கள். சிதைந்த கனவுஎன்று சொன்னார்களே, இதைத்தானே அங்கு சொல்ல வேண்டும்.

அதாவது, இந்தச் சரித்திர நாவலை எழுதுகிறபோது, இளவரசர் மாமல்லர் இதயத்தில் எழுந்த காதலை மையமாக வைத்து எழுதினாரே, அங்கே படை எடுத்துச் செல்கிறானே, இப்படிப் படை எடுத்துச் செல்கிற நேரத்தில், உள்ளத்து உணர்வுகள் புதைக்கப்பட்டு விட்டன .

உடைந்த உள்ளம்

மாமல்லச் சக்கரவர்த்தி உடைந்த உள்ளத்தோடு வீதியில் தங்க ரதத்தில் பவனி வருகிறார். சிவகாமி பார்க்கிறாள். நரசிம்மருக்குத் திருமணம் ஆனது அவளுக்குத் தெரியாது. கேட்கிறாள் கமலியிடம். அது யார்? சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது யார்?’ என்று கேட்கிறாள்.

உனக்குத் தெரியாதா? அவள்தான் பட்டத்து அரசி. பாண்டிய நாட்டு அரச குமாரி. மாமல்லருக்குத் திருமணம் ஆனது உனக்குத் தெரியாதா? பக்கத்தில் இருக்கிற குழந்தைகள், அது மாமல்லரின் குழந்தைகள். மகேந்திரன், குந்தவி என்கிறாள்
சிவகாமிக்கு இதயத்தில் ஒரு நரம்பு அறுந்து வீழ்ந்தது. உலகமே வெறுத்துப்போன நிலையில், தாமரைக்குளத்திற்குப் போகிறாள். கீழே விழுந்து அழுதுகொண்டே இருக்கிறாள். அப்போது இரண்டு குதிரைகள் வருகிறது. இவளை அவர்கள் கவனிக்கவில்லை. சக்கரவர்த்தியும், மானவர்மனும் வருகிறார்கள். மானவர்மனிடம், சக்கரவர்த்தி சொல்கிறார். மானவர்மரே, இந்த மகிழ மரத்திற்குக் கீழேதான் நானும் சிவகாமியும் எத்தனையோ நாள் அமர்ந்து பேசி இருக்கிறோம். அதோ உடைந்து சிதறிக்கிடக்கிறதே அந்தப் பலகை மீது அமர்ந்துதான் ஆயிரம் காதல் சாம்ராஜ்யங்களைக் கனவில் கண்டோம். எல்லாம் உடைந்து சிதறிப்போய்விட்டது. என் கனவும் சிதைந்தது. இரவிலும், பகலிலும், போர்க்களத்திலும், எந்த நேரத்திலும், அவள் நினைவு என்னைவிட்டு அகலவே இல்லைஎன்கிறார்.

இறைவனுக்கே என் பணி

அந்த உள்ளத்தின் துயரை இவள் கேட்கிறாள். மாமல்லர், தன்னை மறக்கவில்லை என்பதை உணருகிறாள். அதே நேரத்தில், அந்தக் காதல் உலகில் இருந்து விடுபடுகிறாள். ஏனென்றால், மகேந்திரர் சொன்னதைப்போல, ‘இவள் கலை தெய்வத்திற்கே அர்ப்பணமாக வேண்டியதுஎன்று திருநாவுக்கரசர் சொன்னாரே!
எனவே, கடைசி அத்தியாயத்தில் திருநாவுக்கரசர் இருக்கிற இடத்தைத் தேடி தந்தையோடு வருகிறாள். ஏகாம்பரநாதர் சன்னதிக்கு வருகிறாள். நாவுக்கரசர் மடத்திற்கு வருகிறாள். நடனம் ஆடுகிறாள்-திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டு நடனம் ஆடுகிறாள்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சி ஆனாள்
அத்தனையையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே

அவளுடைய விருப்பம் என்னவென்றால், ஆண்டாள் எப்படித் தன்னை ஆண்டவனுக்கே அர்ப்பணித்தாளோ , அதைப்போல சிவனுக்கே அர்ப்பணம் ஆகட்டும் என்று கோயில் குருக்கள் உள்ளே இருந்து பூஜை செய்து தட்டிலே திருமாங்கல்யத்தோடு வருகிறார்.
என்னமாய் பாடுகிறார். நடனம் ஆடுகிறார். திருமாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தில் கட்டிக் கொண்டு சிவனுக்கே தன்னை அர்ப்பணித்து விட்டதாக உணருகிறாள்.
அவள் மனதில் இப்போது மாமல்லரைப் பற்றிய நினைவு இல்லை. அவர்மீது கொண்ட காதல் இல்லை. சிவனையே நினைத்துக்கொண்டு இருக்கிறாள்.
இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கிற நரசிம்ம பல்லவ மன்னரின் விசாலமான கன்னங்களில் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக்கொண்டே இருக்கிறது.
யாரும் பார்க்காதவாறு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பல்லவச் சக்கரவர்த்தி நடந்து போகிறார்.

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்ற சிவகாமியின் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சிவகாமியின் சபதம் முற்றிற்று.

விடைபெறுகிறேன் வணக்கம்

மீண்டும் நன்றிகள்; http://mdmk.org.in/article/mar09/sivagamiyin-sabatham

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)